நியூசிலாந்தை வீழ்த்துவது எப்படி..? தென்னாப்பிரிக்க அணிக்கு ஜாக் காலிஸ் அறிவுரை

By karthikeyan VFirst Published Jun 19, 2019, 1:39 PM IST
Highlights

முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு இன்று நியூசிலாந்து அணியுடன் மோதும் போட்டியை சேர்த்து மொத்தம் 4 போட்டிகள் மீதமுள்ளது. 
 

இதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த உலக கோப்பையும் படுமோசமாகவே அமைந்துள்ளது.

டுப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கு அடி மேல் அடியாக விழுந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற தென்னாப்பிரிக்கா, அதன்பின்னர் வங்கதேசம் மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளிலும் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பெற்ற தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி 2 புள்ளிகளை பெற்றது. 

முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணிக்கு இன்று நியூசிலாந்து அணியுடன் மோதும் போட்டியை சேர்த்து மொத்தம் 4 போட்டிகள் மீதமுள்ளது. 

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை அடுத்து பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளையும் எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த நான்கு போட்டிகளிலுமே தென்னாப்பிரிக்க அணி வென்றால் தான் அரையிறுதி வாய்ப்பு இருக்கவாவது செய்யும். ஆனால் இனிவரும் அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி ஜெயித்தால்கூட, டாப் 4 இடங்களில் இருக்கும் ஏதாவது ஒரு அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்தால்தான் தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பு. 

எனவே தென்னாப்பிரிக்க அணி இனிமேல் அரையிறுதிக்கு தகுதிபெறுவது சாத்தியமில்லாத விஷயம். இந்நிலையில், இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்க அணி. இதுகுறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் எழுதியுள்ள கட்டுரையில்,  தென்னாப்பிரிக்க அணியின் சீனியர் வீரர்கள் வெகுண்டெழ இதுதான் சரியான நேரம். சீனியர் வீரர்களும் கேப்டனும்தான் சிறப்பாக ஆடி அணியை முன்னின்று வழிநடத்தி செல்ல வேண்டும்.

நியூசிலாந்துக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி வென்றே தீர வேண்டும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டி உட்பட எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் நல்ல நெட் ரன்ரேட்டுடன் வென்றால்தான் தென்னாப்பிரிக்க அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. எனவே அணியின் சீனியர் வீரர்கள் பொறுப்புணர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். இனிமேல் தென்னாப்பிரிக்க அணியின் விதி அவர்கள் கையில் தான் உள்ளது. டுப்ளெசிஸ், டி காக், ஆம்லா, ரபாடா, இம்ரான் தாஹிர் ஆகியோர் கண்டிப்பாக அவர்களது அல்டிமேட் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று காலிஸ் அறிவுறுத்தியுள்ளார். 
 

click me!