IPL 2022 மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 4 வீரர்களைத்தான் தக்கவைக்கும்.! இர்ஃபான் பதான் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 26, 2021, 10:14 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல்லில் 14 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன.

சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடிவந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனிலிருந்து கூடுதலாக இணைகின்றன. அதனால் அடுத்த சீசனில் 10 அணிகள் ஆடவுள்ளன.

எனவே அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும். புதிய அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு அணியும் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்கலாம் என்பதால் பெரிய பெரிய வீரர்கள் கூட அடுத்த சீசனுக்கான ஏலத்தில் இடம்பெறவுள்ளனர்.

இந்நிலையில், எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கின்றன என்பது குறித்த தகவல் வெளியாகிவருகிறது.  முன்னாள் வீரர்கள் பலரும் இதுகுறித்து கருத்து கூறிவருகின்றனர். 

அந்தவகையில், 5 முறை சாம்பியனும், வலுவான கோர் அணியை கொண்ட அணியுமான மும்பை இந்தியன்ஸ் அணி எந்த 4 வீரர்களை தக்கவைக்க வேண்டும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.

4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்குத்தான் கடினமான விஷயம். ஏனெனில், அந்த அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பெரிய வீரர்கள். ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, பும்ரா, டிரெண்ட் போல்ட் என பெரிய வீரர்கள் பலர் இருக்கும் நிலையில் இவர்களில் நால்வரை மட்டுமே தக்கவைக்க வேண்டும் என்பது கடினமான விஷயம்.

மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பொல்லார்டு மற்றும் பும்ரா ஆகிய நால்வரையும் தக்கவைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கிடையே, ஏலத்திற்கு முன்பாக இவர்களை 2 புதிய அணிகள் ஒப்பந்தம்  செய்ய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மும்பை அணி தக்கவைக்கும் வீரர்கள் குறித்து பேசியுள்ள இர்ஃபான் பதான், ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய இருவரையும் மும்பை அணி கண்டிப்பாக தக்கவைக்கும். வெளிநாட்டு வீரராக பொல்லார்டு தக்கவைக்கப்படுவார். இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரில் இஷான் கிஷன் தான் தக்கவைக்கப்படுவார். ஹர்திக் பாண்டியாவின் தற்போதைய ஃபார்ம் மோசமாக உள்ளது. அதுமட்டுமல்லாது அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டால், இஷான் கிஷன் தக்கவைக்கப்படுவதுதான் சரியாக இருக்கும். எனவே மும்பை அணி ரோஹித், பும்ரா, பொல்லார்டு, இஷான் கிஷன் ஆகிய நால்வரையும் தக்கவைக்கும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

click me!