Asianet Exclusive: இஸ்தான்புலில் ஐபிஎல் ஏலமா..? யார் சொன்னது..? ஐபிஎல் சேர்மன் அருண் துமால் திட்டவட்ட மறுப்பு

By Asianet TamilFirst Published Oct 27, 2022, 6:32 PM IST
Highlights

ஐபிஎல் 16வது சீசனுக்கான (2023) மினி ஏலம் துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் நடக்கவுள்ளதாக தகவல் பரவிய நிலையில், அதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் ஐபிஎல் சேர்மன் அருண் துமால்.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. 15வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என்ற 2 அணிகள் புதிதாக களமிறங்கியதால் கடந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடத்தப்பட்டது.

அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் மினி ஏலமாக நடக்கவுள்ளது. அடுத்த ஐபிஎல் சீசன், 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று தெரிகிறது. அடுத்த சீசனுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடக்கவுள்ளதாக தெரிகிறது. ஏலத்திற்கு முன்பாக ஏலத்தில் கலந்துகொள்ளும் வீரர்கள் பட்டியலை தயார் செய்யவேண்டும். 

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி புள்ளி பட்டியலில் இந்தியா முதலிடம்

எனவே ஐபிஎல் அணிகள் தக்கவைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடர் நவம்பர் 13 முடியும் நிலையில், இந்த டி20 உலக கோப்பையில் வீரர்கள் ஆடுவதை பொறுத்து  அணிகள் தங்களுக்கு தேவையான மற்றும் தேவையில்லாத வீரர்களை முடிவு செய்யும்.

இந்நிலையில், ஐபிஎல் மினி ஏலம் நடக்கும் இடம் குறித்து ஒரு தகவல் பரவியது. ஐபிஎல் 16வது சீசனுக்கான மினி ஏலம் பெங்களூருவில் நடக்கவுள்ளதாகத்தான் ஆரம்பத்தில் தகவல் வெளிவந்திருந்தது. ஆனால், ஐபிஎல் ஏலம் வழக்கமாக நடக்கும் நகரங்களான மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் பெங்களூருவுடன் போட்டி போடுவதாக தகவல் வெளியானது. இந்த இந்திய நகரங்களுடன் இஸ்தான்புல் பெயரும் அடிபட்டது.

ஐபிஎல் மினி ஏலம் இஸ்தான்புலில் நடத்த திட்டமிடப்படுவதாக தகவல் வெளியானது. இந்த தகவல் தீயாய் பரவிய நிலையில், ஐபிஎல் புதிய தலைவர் அருண் துமால் அந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையில் கிறிஸ் கெய்லின் சாதனையை காலி செய்த கோலி..! அடுத்த டார்கெட் ஜெயவர்தனே

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கிடம் இதுகுறித்து பேசிய அருண் துமால், இதுமாதிரியான தகவல் எல்லாம் யார் சொல்கிறார்கள்..? அது முற்றிலும் அபத்தமான தகவல். ஐபிஎல் ஏலத்தை என்றைக்கு நடத்துவது என்பது குறித்து மட்டும்தான் ஆலோசித்துவருகிறோம். ஏலம் நடத்தும் இடம் குறித்து இன்னும் ஆலோசிக்கக்கூட இல்லை. இஸ்தான்புலில் ஐபிஎல் ஏலம் நடத்தும் திட்டமே இல்லை. அது தவறான தகவல் என்று அருண் துமால் தெரிவித்துள்ளார்.
 

click me!