அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருகிறது.
அண்டர் 19 உலக கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் இலங்கையை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் ஜப்பானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - ஜப்பான் இடையே நேற்று நடந்த போட்டியில் ஜப்பான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அனுபவமற்ற, பெரிதாக கிரிக்கெட் ஆடாத ஜப்பான் அணியை வெறும் 41 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா அண்டர் 19 அணி. ஜப்பான் அணியில் ஒரு வீரர் இரட்டை இலக்க ஸ்கோர் அடிக்கவில்லை.
டக் அவுட் அல்லது ஒற்றை இலக்கத்தில் அனைவருமே வெளியேற, அந்த அணி வெறும் 23 ஓவரில் 41 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் சார்பில் ரவி பிஷ்னோய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Also Read - ஒருநாள் அணியில் இளம் அதிரடி பேட்ஸ்மேன் அறிமுகம் .. நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஒன்றுமே இல்லாத 42 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் குமார் குஷாக்ரா ஆகிய இருவருமே அடித்துவிட்டனர். 5வது ஓவரிலேயே 42 ரன்களை அடித்து இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மொத்த போட்டியே 28 ஓவர்களில் முடிந்துவிட்டது.