2011 உலக கோப்பை ஃபைனலில் தோனி அந்த அதிரடி முடிவை எடுத்தது ஏன்..? இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Apr 2, 2021, 4:45 PM IST
Highlights

2011 உலக கோப்பையை இந்திய அணி வென்று இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அந்த இறுதி போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி எடுத்த அதிரடி முடிவு குறித்தும் அது ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பார்ப்போம்.
 

1983ம் ஆண்டுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையிலான இந்திய அணி, 2011ல் உலக கோப்பையை வென்று அசத்தியது. 2011ம் ஆண்டு இதே ஏப்ரல் 2ம் தேதி  தான் இந்திய அணி இறுதி போட்டியில் இலங்கையை வீழ்த்தி 2வது முறையாக ஒருநாள் உலக கோப்பையை வென்றது. உலக கோப்பையை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதுகுறித்த நினைவுகளை அந்த உலக கோப்பையில் ஆடிய வீரர்கள் பகிர்ந்துவருகின்றனர். ரசிகர்கள் அந்த தினத்தை கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், அந்த இறுதி போட்டியில் இந்திய அணியின் கேப்டன் தோனி எடுத்த அதிரடி முடிவு குறித்தும் அது ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் பார்ப்போம்.

Latest Videos

மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவித்தது. பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் முக்கியமான இன்னிங்ஸை ஆடிய கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். 

இந்த போட்டியில் 3வது விக்கெட்டாக கோலி அவுட்டான பிறகு நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ், பேட்டிங் ஆட செல்லாமல், தோனி சென்றார். தோனி சிறப்பாக ஆடி, இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும் கூட, யுவராஜுக்கு முன்னால் தோனி ஏன் பேட்டிங் ஆட சென்றார் என்பது பலருக்கும் சந்தேகமாகவே இருந்தது. 

மிடில் ஓவர்களில் பந்துவீசிக்கொண்டிருந்த இலங்கை அணியின் டாப் ஸ்பின்னர் முரளிதரனின் பவுலிங்கை தன்னால் சிறப்பாக எதிர்கொண்டு ஆடமுடியும் என்ற நம்பிக்கையில் தான் தோனி யுவராஜுக்கு முன் களமிறங்கினார். முரளிதரன் ஐபிஎல்லில் தோனியுடன் சிஎஸ்கே அணியில் ஆடினார். அதனால் முரளிதரனின் பவுலிங்கை பற்றி தனக்கு நன்றாக தெரியும் என்பதால், தன்னால் முரளிதரனின் பவுலிங்கை சிறப்பாக ஆடி, அவருக்கு அழுத்தத்தை அதிகரிக்க முடியும் என்பதால் தான் தோனி, யுவராஜுக்கு முன் இறங்கினார். இதை அவரே ஏற்கனவே கூறியிருக்கிறார். 

வெறுமனே நினைப்புடன் மட்டும் இல்லாமல், தனது எண்ணம் சரியானதுதான் என்பதை, சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து அதை நிரூபித்தும் காட்டினார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது.

click me!