விஜய் ஹசாரே காலிறுதியில் ஆந்திராவை 117 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது குஜராத் அணி.
விஜய் ஹசாரே தொடரில் இன்று 2 காலிறுதி போட்டிகள் நடந்தன. ஒரு போட்டியில் கேரளாவை வீழ்த்தி கர்நாடகா அணி வெற்றி பெற்ற நிலையில், மற்றொரு போட்டியில் குஜராத்தும் ஆந்திராவும் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பிரியங்க் பன்சால் அபாரமாக ஆடி சதமடித்தார். தொடக்கம் முதலே பன்சால் சிறப்பாக ஆட, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடி சதமடித்த பிரியங்க் பன்சால் 134 ரன்களை குவித்து 49வது ஓவரில் தான் ஆட்டமிழந்தார்.
பிரியங்க் பன்சாலின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 299 ரன்களை குவித்த குஜராத் அணி, 300 ரன்கள் என்ற கடின இலக்கை ஆந்திராவிற்கு நிர்ணயித்தது. 300 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆந்திரா அணியில் ரிக்கி பூய் மட்டுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 67 ரன்னில் ஆட்டமிழக்க, அந்த அணியில் வேறு யாருமே சரியாக ஆடாததால், 42வது ஓவரிலேயே 182 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய இருவரும் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், நாளை மும்பை - சவுராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் - டெல்லி இடையே 2 காலிறுதி போட்டிகள் நடக்கின்றன.