#ENGvsSL 2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கையை அசால்ட்டா வீழ்த்தி தொடரை வென்ற இங்கி., ஆட்டநாயகன் சாம் கரன்

By karthikeyan VFirst Published Jul 2, 2021, 2:37 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது இங்கிலாந்து அணி.
 

இங்கிலாந்து - இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்தது.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவரில் 241 ரன்கள் அடித்தது. 

21 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய இலங்கை அணியை, அபாரமாக ஆடி 91 ரன்களை குவித்து நல்ல ஸ்கோரை எட்டவைத்தார் தனஞ்செயா டி சில்வா. அபாரமாக ஆடிய ஆடிய சில்வா 91 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பின்வரிசையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஹசரங்கா 26 ரன்களும், ஷனாகா 47 ரன்களும் அடித்தனர்.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 5 விக்கெட்டுகளையும், டேவிட் வில்லி 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 242 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 12.4 ஓவரில் 76 ரன்களை குவித்தனர். பேர்ஸ்டோ 29 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஜேசன் ராய் 52 பந்தில் 60 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் கேப்டன் ஒயின் மோர்கனும் இணைனது அபாரமாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இலக்கை எட்டி போட்டியை முடித்துவைத்தனர். ஜோ ரூட் மற்றும் ஒயின் மோர்கனின் அரைசதங்களால் 43வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

ஜோ ரூட் 68 ரன்களும், மோர்கன் 75 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியையடுத்து, 2-0 என இங்கிலாந்து அணி தொடரை வென்றது. 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய சாம் கரன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
 

click me!