உன்னால, உன் கூட ஆடுறவங்களுக்குத்தான் பிரச்னை.. சீனியர் வீரரை விளாசிய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்

By karthikeyan VFirst Published Feb 28, 2020, 2:33 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாராவின் மந்தமான பேட்டிங்கை முன்னாள் தேர்வுக்குழு தலைவர் கடுமையாக சாடியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே சரியில்லை. 

பேட்டிங்கில் மயன்க் அகர்வாலும் பவுலிங்கில் இஷாந்த் சர்மாவும் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இருவரது ஆட்டம் வெற்றிக்கு உதவவில்லை. சீனியர் வீரர்களான கோலி, புஜாரா, ரஹானே மற்றும் நட்சத்திர பவுலர் பும்ரா ஆகியோர் சோபிக்காததால் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்தது பெரிய விஷயமல்ல. ஏனெனில் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். ஆனால் தோற்ற விதம் படுமோசமானது. அதுதான் பெரும் வேதனையளித்தது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில், புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரின் மந்தமான பேட்டிங்கை கேப்டன் கோலி கடுமையாக சாடியுள்ளார். 

புஜாரா பொதுவாகவே மெதுவாக ஆடக்கூடியவர். ஆனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணுகவேண்டும். அதுதான் சிறந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. முதல் இன்னிங்ஸ் முடிவில் 183 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணிக்கு, இரண்டாவது இன்னிங்ஸில் இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்ற அணுகுமுறையை விட, ஸ்கோர் செய்வதற்காக ஆடுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். அதுவும் மூன்றாம் நாள் ஆட்டத்திலேயே இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டதால், எஞ்சிய இரண்டரை நாட்களும் தடுப்பாட்டம் ஆடி தோல்வியை தவிர்ப்பது சாத்தியமில்லாத விஷயம். எனவே ஓரளவிற்கு ஸ்கோர் செய்திருக்க வேண்டும்.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாரா படுமோசமாக ஆடினார். 28 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை. ரன் கணக்கை தொடங்கவே 5 ஓவர்கள் எடுத்துக்கொண்டார். மொத்தமாக 81 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்து அணிக்கு எந்தவிதத்திலும் பிரயோஜனமில்லாத ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டு சென்றார். அதேபோல ஹனுமா விஹாரியும் 79 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்தார். ரஹானேவும் மந்தமாகவே பேட்டிங் ஆடினார். 

இவர்களின் பேட்டிங் அணுகுமுறையை கேப்டன் கோலி கடுமையாக சாடியிருந்த நிலையில், முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்காரும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள திலீப் வெங்சர்க்கார், புஜாரா நிறைய ரன்களை அடித்திருக்கிறார். ஆனால் அவர் சிங்கிள் ரொடேட் செய்து ஆடவேண்டும். அவர் அப்படி சிங்கிள் ரொடேட் செய்யாமல் பந்துகளை கடத்தினால், அது மறுமுனையில் நிற்கும் பேட்ஸ்மேனின் ரிதத்தை பாதிப்பதுடன் அவர் மீதான அழுத்தத்தையும் அதிகரிக்கும். எனவே புஜாரா சிங்கிள் ரொடேட் செய்து ஆடவேண்டும். அதேபோல ரஹானே அவருக்கு கிடைக்கும் நல்ல ஸ்டார்ட்டை பயன்படுத்தி பெரிய இன்னிங்ஸை ஆடுவதில்லை என்று வெங்சர்க்கார் விமர்சித்துள்ளார். 

Also Read - 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிய சீனியர் வீரர்.. கண்டிப்பா அவருதான் மாற்று வீரர்

சிங்கிள் கூட ரொடேட் செய்யாமல், மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் பேட்டிங் ஆடுவது அணிக்கு எந்தவகையிலும் பயனளிக்காது என்று கோலி ஏற்கனவே இவர்களை சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!