டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் குல்தீப் யாதவும் சாஹலும் இணைந்து ஆட வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியின் இடத்தை பிடித்த குல்தீப் - சாஹல் ஜோடியால், அஷ்வின் - ஜடேஜா அளவிற்கு நீடித்து நிலைக்க முடியவில்லை.
2017-2018ம் ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்த குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, 34 ஒருநாள் போட்டிகளில் ஆடி 65 விக்கெட்டுகளையும் 10 டி20 போட்டிகளில் இணைந்து ஆடி 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.
2019லிருந்து வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. அதற்கு பின்னர் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக ஆடவேயில்லை. அவர்கள் இருவரும் இணைந்து மீண்டும் ஆடுவதற்கான வாய்ப்பாக இலங்கை தொடர் அமைந்துள்ளது. ஆனால் மற்றொரு ரிஸ்ட் ஸ்பின்னரான ராகுல் சாஹரும் வளர்ந்துவிட்டார். அவர் சிறந்த ஸ்பின்னராக தன்னை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் குல்தீப்பும் சாஹலும் இணைந்து ஆடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா, இப்போதைய சூழலில் அவர்கள் இருவரும் இணைந்து ஆடுவதற்கான வாய்ப்பில்லை. ராகுல் சாஹர், சாஹலைவிட முன்னணியில் இருக்கிறார். இலங்கைக்கு எதிரான தொடர் தான் எதையும் தீர்மானிப்பதற்கான முக்கியமான தொடர்.
குல்தீப் யாதவ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் ஆடவில்லை. எனவே அவர் ஆடுவதற்கான வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் டி20 உலக கோப்பைக்கு இன்னும் ஒருசில மாதங்கள் இருப்பதால், அதற்கிடையே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.