
ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. முதல் அணியாக சென்னையில் பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே அணி, முதல் போட்டியை மும்பையில் ஆடவுள்ளதால் கடந்த 26ம் தேதி மும்பை சென்றது.
சிஎஸ்கே அணி வரும் 10ம் தேதி முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. இந்த சீசனுக்கான சிஎஸ்கே அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
கடந்த சீசனில் அபாரமாக ஆடிய இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டே இந்த சீசனிலும் டுப்ளெசிஸுடன் தொடக்க வீரராக இறங்குவார். ராயுடு 3ம் வரிசையிலும் ரெய்னா நான்காம் வரிசையிலும் ஆடுவார்கள்.
கேப்டன் தோனி 5ம் வரிசையிலும் அவருக்கு அடுத்து ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் இறங்குவார்கள். இந்த சீசனுக்கான ஏலத்தில் சிஎஸ்கே அணி எடுத்த ராபின் உத்தப்பா, புஜாரா, மொயின் அலி மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.
ராபின் உத்தப்பாவுக்கு டாப் ஆர்டரிலும் இடமில்லை, மிடில் ஆர்டரிலும் இடமில்லை. தோனிக்கு அடுத்து ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆடுவதால் மொயின் அலிக்கும் அணியில் இடமில்லை.
ஸ்பின்னர்களாக கரன் ஷர்மா, இம்ரான் தாஹிர் ஆகியோரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாஹரும் ஆடுவார்கள். இங்கிடி/பிராவோ ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார்.
சிஎஸ்கே அணியின் உத்தேச ஆடும் லெவன்:
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், கரன் ஷர்மா, இம்ரான் தாஹிர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், லுங்கி இங்கிடி/பிராவோ.