
ஐபிஎல் 14வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் பாதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து இந்திய வீரர்களை மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களையும் பாதுகாப்பாக அனுப்பிவைத்தது பிசிசிஐ.
ஐபிஎல் நடந்துகொண்டிருந்தபோதே, ஆஸி., அரசு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு தடை விதித்த நிலையில், அந்நாட்டு வீரர்களை பாதுகாப்பாக அனுப்பிவைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அந்த கட்டாயம் ஏற்படவில்லை என்றாலும், பிசிசிஐ அதை செய்திருக்கும்.
இந்தியாவிலிருந்து நேரடியாக ஆஸி., வீரர்களை அந்நாட்டிற்கு அனுப்பிவைக்க முடியாது என்பதால், வார்னர், ஸ்மித், கம்மின்ஸ் உள்ளிட்ட ஆஸி., வீரர்கள், ஆஸி.,யை சேர்ந்த பயிற்சியாளர்கள் ஆகியோரை மாலத்தீவுக்கு அனுப்பி அங்கிருந்து மிகவும் பாதுகாப்பாக, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஆஸி.,க்கு அனுப்பிவைத்தது பிசிசிஐ.
ஆஸி., வீரர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்ததையடுத்து, பிசிசிஐ அவர்கள் மீது அதிக கவனமும் அக்கறையும் செலுத்தி பாதுகாப்பாகவும் விரைவாகவும் ஆஸி.,க்கு அனுப்பிவைத்ததற்கு பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.