#ENGvsIND என்ன கொடுமடா இது..? மாற்று வீரர்களுக்கே மாற்று தேட வேண்டிய நெருக்கடியில் பிசிசிஐ

By karthikeyan VFirst Published Jul 29, 2021, 8:26 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலிருந்து காயத்தால் விலகிய வீரர்களுக்கு மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் அவர்களுக்கு மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
 

இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்டாண்ட்பை ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் ஆகிய மூவரும் காயத்தால் இந்த தொடரிலிருந்து விலகினர்.

இதையடுத்து அவர்களுக்கான மாற்று வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அறிவிக்கப்பட்டனர். ஸ்டாண்ட்பை வீரராக எடுக்கப்பட்டிருந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் அபிமன்யூ ஈஸ்வரனும் மெயின் அணியில் சேர்க்கப்பட்டார். பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இலங்கை தொடரை முடித்துவிட்டு, அங்கிருந்து நேரடியாக இங்கிலாந்துக்கு செல்லவிருந்தனர். 

இந்நிலையில், இலங்கை தொடரில் ஆடிவந்த க்ருணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு இலங்கைக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டிகளிலும் ஆடவில்லை. அந்த தனிமைப்படுத்தப்பட்ட 8 வீரர்களில், இங்கிலாந்துக்கு செல்வதாக இருந்த பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவருமே அடக்கம்.

அதனால் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இங்கிலாந்துக்கு செல்லமுடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அவர்களே அனுப்பப்படுவார்களா அல்லது அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்கள் அனுப்பப்படுவார்களா என்பது குறித்து இன்சைட் ஸ்போர்ட்டிடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், இப்போதைக்கு எதையுமே உறுதியாக சொல்லமுடியாது. அடுத்த சில தினங்களுக்கு பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமாரை கண்காணித்துவிட்டுத்தான் எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கமுடியும் என்று கூறியிருக்கிறார்.
 

click me!