ஜிம்பாப்வே மற்றும் வங்கதேசம் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் லிட்டன் தாஸின் அபார சதத்தால், 50 ஓவரில் 276 ரன்களை குவித்த வங்கதேச அணி, 277 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஜிம்பாப்வேவுக்கு நிர்ணயித்துள்ளது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது.
ஹராரேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியின் கேப்டனுமான தொடக்க வீரருமான தமீம் இக்பால் டக் அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அபாரமாக ஆடி சதமடித்தார்.
லிட்டன் தாஸ் ஒருமுனையில் நிலைத்து ஆட, மறுமுனையில் ஷகிப் அல் ஹசன்(19), முகமது மிதுன்(19), மொசாடெக் ஹுசைன்(5), மஹ்மதுல்லா(33) ஆகியோர் மறுமுனையில் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தனர். அபாரமாக ஆடி சதமடித்த லிட்டன் தாஸ் 102 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அஃபிஃப் ஹுசைன் சிறப்பாக ஆடி 45 ரன்களும், மெஹிடி ஹசன் 26 ரன்களும் அடித்தனர்.
இதையடுத்து 50 ஓவரில் 276 ரன்களை குவித்த வங்கதேச அணி, 277 ரன்கள் என்ற இலக்கை ஜிம்பாப்வே அணிக்கு நிர்ணயித்துள்ளது.