இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க!ரோஹித்,ராகுல்,ரிஷப்லாம் வேண்டாம்-நெஹ்ராவின் சர்ப்ரைஸ் தேர்வு

By karthikeyan VFirst Published Nov 7, 2021, 6:12 PM IST
Highlights

இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று தனது சர்ப்ரைஸான தேர்வை தெரிவித்துள்ளார் ஆஷிஸ் நெஹ்ரா.
 

2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற விராட் கோலி, 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார். கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த சாதனைக்குரிய கேப்டன் கோலி.

வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகளை குவித்த கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக பேட்டிங், கேப்டன்சி ஆகிய இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்தார். 

ஆனாலும் ஐசிசி டிராபியை வெல்லவில்லை என்ற விமர்சனம் கோலி மீது இருந்துவருகிறது. 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் வரை சென்ற இந்திய அணி, ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்றது. 2019 ஒருநாள் உலக கோப்பையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் நியூசிலாந்திடம் தோற்றது.

என்னதான் இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்தாலும்,  உலக கோப்பையை வெல்லாதது கோலியின் கேப்டன்சி கெரியரில் கரும்புள்ளியாகவே இருந்துவருகிறது. ஐபிஎல்லிலும் கோப்பையை வென்றதில்லை என்ற விமர்சனம் அவர் மீது உள்ளது. இவையெல்லாம் சேர்ந்து ஒரு மெகா நெருக்கடியாக உருவெடுத்ததன் விளைவாக, அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக மோசமாக உள்ளது. 

அதுமட்டுமல்லாது, ஒரு கேப்டனாக அவரது அணி தேர்வு தொடர்ச்சியாக விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கிறது. அணியின் சிறந்த ஆடும் லெவனுடன் அவர் இறங்குவதில்லை. அதுமட்டுமல்லாது பாரபட்சமான வீரர்கள் தேர்வு, களவியூகங்களில் சிறப்பாக செயல்படாதது என அவரது கேப்டன்சி தொடர்ந்து விமர்சனங்களுக்குள்ளாகியே வந்திருக்கிறது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஷ்வினை வேண்டுமென்றே ஓரங்கட்டினார் என்பது அப்பட்டமாக தெரிந்தது.  கேப்டன் விராட் கோலியின் ஆட்டிடியூட் சரியில்லை என்று பிசிசிஐயிடம் சீனியர் வீரர் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த தகவல் வெளியான ஒருசில நாட்களில் கேப்டன் விராட் கோலி, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார். பணிச்சுமையை குறைத்து பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், கேப்டன்சியிலிருந்து விலக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார் என்பதே உண்மை.

டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 அணியின்   கேப்டன்சியிலிருந்து விலகும் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலக நேரிடும். 

இதையடுத்து, கோலிக்கு அடுத்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக யார் பொறுப்பேற்பார் என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படத்தான் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனால் சிலர் ராகுலை நியமிக்கலாம் என்றும், சிலர் ரிஷப் பண்ட்டை நியமிக்கலாம் என்றும் கருத்து கூறிவரும் நிலையில், ஆஷிஷ் நெஹ்ரா, இவர்கள் யாருமே வேண்டாம் என்று சர்ப்ரைஸாக ஒரு தேர்வு செய்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசியுள்ள ஆஷிஷ் நெஹ்ரா, ரோஹித் சர்மாவின் பெயருக்கு அடுத்து, ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரின் பெயர்களையும் கேப்டன்சிக்கான போட்டியில் கேள்விப்படுகிறோம். ரிஷப் பண்ட் உலகம் முழுதும் பயணம் செய்து ஆடியுள்ளார்; டிரிங்ஸும் தூக்கியுள்ளார்; அணியிலிருந்து ஓரங்கட்டவும் பட்டிருக்கிறார். மயன்க் அகர்வாலின் காயத்தால் ராகுல் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றார். ஆனால் பும்ரா  3 விதமான போட்டிகளிலும் நிரந்தர இடம்பிடித்துள்ளார். எனவே பும்ராவை கேப்டனாக நியமிக்கலாம். ஃபாஸ்ட் பவுலரை கேப்டனாக நியமிக்கக்கூடாது என ரூல்புக்கில் ஏதாவது எழுதப்பட்டிருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார் ஆஷிஷ் நெஹ்ரா.
 

click me!