#ENGvsSL நான் கேப்டனா இருந்திருந்தா அந்த 3 வீரர்களுக்கும் 2-3 அறையை போட்ருப்பேன்..! ரணதுங்கா கடுங்கோபம்

By karthikeyan VFirst Published Jul 2, 2021, 4:11 PM IST
Highlights

தான் கேப்டனாக இருந்திருந்தால் கொரோனா விதிமுறைகளை மீறிய 3 இலங்கை வீரர்களுக்கு அறையை போட்டிருப்பேன் என்று முன்னாள் கேப்டன் ரணதுங்கா கடுங்கோபத்துடன் தெரிவித்திருக்கிறார்.

1996ல் ரணதுங்கா கேப்டன்சியில் உலக கோப்பையை வென்ற இலங்கை அணி, அடுத்த 15 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சியது. ஜெயசூர்யா, முரளிதரன், அட்டப்பட்டு, சமிந்தா வாஸ், சங்கக்கரா, ஜெயவர்தனே, மலிங்கா என பல தலைசிறந்த வீரர்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி, 2007 மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பைகளில் ஃபைனல் வரை சென்று ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.

மிகச்சிறந்த டாப் அணியாக திகழ்ந்த இலங்கை அணி, அண்மைக்காலமாக ச ர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு அணியாகவே மதிக்கப்படுவதில்லை. அந்தளவிற்கு படுமோசமாக ஆடிவருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி, டி20 தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. அதைத்தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது. இந்த படுதோல்விகளுக்கு அந்த அணியின் முக்கியமான 3 வீரர்கள் ஆடாததும் காரணம். அவர்கள் ஆடமுடியாமல் போனதற்கு அவர்களே காரணம்.

கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியே நடத்தப்படுகிறது. வீரர்கள் அனைவரும் இந்த நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். ஆனால் குசால் மெண்டிஸ், தனுஷா குணதிலகா மற்றும் டிக்வெல்லா ஆகிய இலங்கை அணியின் 3 முக்கியமான வீரர்களும் கொரோனா விதிகளை மீறி வெளியே சுற்றியதன் விளைவாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டு, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டனர்.

இந்த வீரர்களின் பொறுப்பற்ற செயல், இலங்கை கிரிக்கெட் வாரியம், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

அந்தவகையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அணியின் உலக கோப்பை(1996) வின்னிங் கேப்டன் ரணதுங்கா, வீரர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கே நான் அனுமதிக்கமாட்டேன். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் மூழ்கியிருக்கிறார்கள் கிரிக்கெட் வீரர்கள். சொல்லப்போனால் கிரிக்கெட் ஆடுவதை தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். இலங்கை அணி நிர்வாகம் இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. நான் கேப்டனாக இருந்திருந்தால், இவர்கள் எல்லாம் எப்பேர்ப்பட்ட வீரர்களாக இருந்தாலும் சரி, 2-3 அறைகளை போட்டிருப்பேன் என்று கடுங்கோபத்துடன் பேசியுள்ளார் ரணதுங்கா.
 

click me!