டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் அணியின் தொடக்க வீரராக ஆட இருக்கும் வாய்ப்பு குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வெள்ளைப்பந்து அணியின் பிரதான தொடக்க வீரராக இருந்துவந்த ஷிகர் தவான் இடைப்பட்ட காலத்தில் ஓரங்கட்டப்பட்டார். ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் தனக்கான இடத்தை அவர் பிடித்தாலும், டி20 கிரிக்கெட்டில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.
ரோஹித் சர்மாவுடன் கேஎல் ராகுலே தொடக்க வீரராக இறங்கிவருகிறார். இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை ஷிகர் தவான் தான் வழிநடத்தவுள்ளார். கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளதால், இலங்கையை தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட அணி எதிர்கொள்ளவுள்ளது.
எனவே இது தவானுக்கு மீண்டும் தனக்கான இடத்தை பிடிக்க சரியான வாய்ப்பு. தவானின் ஸ்டிரைக் ரேட் தான் அவரது பிரச்னையாக இருந்துவந்தது. தவான் ஓரளவிற்கு ஸ்கோர் செய்தாலும், அவரது ஸ்டிரைக் ரேட் மிகக்குறைவாக இருந்ததால் தான் அணியில் இடத்தை இழந்தார். ஆனால் ஐபிஎல்லில் அதிரடியாக ஆடி நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார்.
இந்நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான வாய்ப்பு குறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஷிகர் தவானை டி20 கிரிக்கெட்டில் முதன்மை ஓபனிங் ஆப்சனாக இந்திய அணி வைத்திருக்கவில்லை. கடைசியாக அவர் ஆடிய தொடரில் கூட ஒரு போட்டியில் வாய்ப்பளித்துவிட்டு 4 போட்டிகளில் உட்காரவைக்கப்பட்டார். ஐபிஎல் தவானுக்கு நல்ல தொடராக அமைந்தது. இலங்கைக்கு எதிரான தொடரில் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் நன்றாக ஆடினால் டி20 உலக கோப்பையில் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார் ஆகாஷ் சோப்ரா.