IND vs NZ விராட் கோலி வந்துட்டா யாரையாவது தூக்கணும்.. ஆனால் கண்டிப்பா அவரை தூக்கக்கூடாது! ஆகாஷ் சோப்ரா அதிரடி

By karthikeyan VFirst Published Nov 30, 2021, 7:13 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவதால், இந்திய அணியில் யாரை நீக்குவது என்பது பெரும் விவாதமாக உள்ள நிலையில், அதுதொடர்பாக ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடந்தது. அந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கான்பூர் டெஸ்ட்டில் விராட் கோலி ஆடாததால் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய  அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அறிமுக டெஸ்ட்டிலேயே முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்து, அறிமுக டெஸ்ட்டில் சதமும், அரைசதமும் அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுக டெஸ்ட்டில் சதமும், அரைசதமும் அடித்தது கூட பெரிய விஷயமில்லை. ஆனால் அவர் அடித்த சூழல் தான் முக்கியமானது. இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலுமே இக்கட்டான நிலையில் இருந்தபோது சதமும், அரைசதமும் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஷ்ரேயாஸ் ஐயர் கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடினார். இந்நிலையில், மும்பையில் நடக்கவுள்ள 2வது டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவதால், இந்திய அணியில் யார் நீக்கப்படுவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. சிறப்பாக ஆடி அணியை இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றிய ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படுவாரா அல்லது ஃபார்மில் இல்லாமல் அண்மைக்காலமாக படுமோசமாக சொதப்பிவரும் புஜாரா - ரஹானே ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவாரா என்பது பெரும் கேள்வியாக உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து கூறியுள்ள ஆகாஷ் சோப்ரா, ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய ஆடிய விதத்தை பார்க்கையில், அவரை கண்டிப்பாக அடுத்த டெஸ்ட்டில் நீக்கக்கூடாது. அணிக்குள் நுழைவது யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் நீக்கப்படுவது ஷ்ரேயாஸ் ஐயராக இருக்கக்கூடாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
 

click me!