ஆஸ்திரேலியாவின் ஆணவத்தையும், ஸ்டீவ் வாகின் திமிரையும் அடக்கிய இந்தியா.. கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான தினம்

By karthikeyan VFirst Published Mar 15, 2020, 1:57 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் ஆணவத்தையும் ஸ்டீவ் வாக்கின் திமிரையும் அடக்கி. அந்த அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற, கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான தினம் இன்று.
 

ஸ்டீவ் வாக் தலைமையில் தொடர் வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, 2001ம் ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

அதற்கு முன்பும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று வெற்றி பயணத்தை தொடர்ந்தது. அந்த அணி, நாங்கதான்.. எங்களை வீழ்த்த யாரும் இல்லை என்ற ஆணவத்துடன் ஆடிய காலம் அது. 

இந்நிலையில், இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. கொல்கத்தாவில் மார்ச் 11ம் தேதி தொடங்கி, நடந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 445 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணி  முதல் இன்னிங்ஸில் வெறும் 171 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. 

இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடக்க வீரர்கள் தாஸ், சடகோபன் ரமேஷ், சச்சின் டெண்டுல்கர், கங்குலி ஆகிய நால்வரும் 232 ரன்களுக்குள்ளாக ஆட்டமிழந்துவிட்டனர். ஆனால் லட்சுமணன் மட்டும் ஒருமுனையில் நிலைத்து ஆடி சதமடித்தார். மூன்றாம் நாள்(மார்ச் 13) ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்திருந்தது. லட்சுமணன் 109 ரன்களுடனும் டிராவிட் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

நான்காம் நாள்(மார்ச் 14) ஆட்டத்தை டிராவிட்டும் லட்சுமணனும் தொடர்ந்தனர். அந்த நாள் தொடங்கும்போது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு தெரிந்திருக்காது, இந்த நாள் வரலாற்றில் இடம்பெறப்போகிறது என்று... ஆம்.. நான்காம் நாள் முழுவதும் பேட்டிங் ஆடி, இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து மெகா ஸ்கோரை எட்ட, டிராவிட்டும் லட்சுமனனும் உதவினர். அந்த நாள் முழுவதும் ஆடிய டிராவிட்டும் லட்சுமணனும் இணைந்து 90 ஓவரில் விக்கெட்டே விட்டுக்கொடுக்காமல் 335 ரன்களை குவித்தனர்.

அபாரமாக ஆடி இரட்டை சதமடித்த லட்சுமணன் 281 ரன்களையும் ராகுல் டிராவிட் 180 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்களை குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஃபாலோ ஆன் பெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 384 ரன்களை நிர்ணயித்தது இந்திய அணி. 

கடினமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி ஹர்பஜன் சிங்கின் சுழலை சமாளிக்க முடியாமல் வெறும் 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட்டுகள் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தி கடைசி நாள்(மார்ச் 15) ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற உதவினார். இதையடுத்து இந்திய அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் டிராவிட், இரண்டாவது இன்னிங்ஸில் ஆறாம் வரிசையில் இறங்கியதை கண்ட ஸ்டீவ் வாக், அடுத்த போட்டியில் டிராவிட் என்ன 12ம் வரிசையிலா இறங்குவார்? என்று கிண்டலடித்துள்ளார். அந்த கிண்டலை பாசிட்டிவ் எனர்ஜியாக மாற்றிய ராகுல் டிராவிட், அபாரமாக இன்னிங்ஸை ஆடி ஆஸ்திரேலிய அணியின் கொட்டத்தை அடக்கினார். 

Also Read - வசமா சிக்கிய சஞ்சய் மஞ்சரேக்கர்.. வச்சு செஞ்ச சிஎஸ்கே.. தக்க தருணத்தில் மூக்கை உடைத்த தரமான சம்பவம்

ஆஸ்திரேலியாவின் ஆணவத்தையும் ஸ்டீவ் வாகின் திமிரையும் அடக்கி, இந்திய அணி அபார வெற்றியை பெற்ற தினம் இன்று.. 19 ஆண்டுகள் கழித்தும் ராகுல் டிராவிட்- லட்சுமணன் ஜோடியின் பேட்டிங்கும், ஹர்பஜன் சிங்கும் பவுலிங்கும் இன்றும் நினைவுகூறப்படுகிறது. 
 

click me!