புதுச்சேரி உள்துறை அமைச்சரின் உறவினர் படுகொலை; 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

By Velmurugan sFirst Published Mar 27, 2023, 2:34 PM IST
Highlights

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமசிவாயத்தின் உறவினரும், பாஜக பிரமுகருமான செந்தில் குமரனை படுகொலை செய்த 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

புதுச்சேரி வில்லியனுார் கணுவாப்பேட்டை, முதல் வன்னியர் வீதியைச் சேர்ந்த ஆசிரியர் ரங்கசாமி மகன் செந்தில்குமரன் (வயது 45). உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் நெருங்கிய உறவினரான இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். தற்போது மங்கலம் தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளராக இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் வில்லியனுார் – விழுப்புரம் சாலை கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஹரிகரன் பேக்கரியில் நின்று கொண்டு கட்சியின் விவசாய அணி நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மூன்று இரு சக்கர வாகனங்களில் முகத்தில் மாஸ்க் அணிந்துவந்த ஏழு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமரன் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசி உள்ளனர். 

புகை மண்டலத்தில் மயங்கி விழுந்த செந்தில்குமரன் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டி சிதைத்துவிட்டு இறந்ததை உறுதி செய்த பின்னர் அங்கிருந்து தப்பி சென்றனர். பாஜக பிரமுகர் செந்தில்குமரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் 500க்கும் மேற்பட்ட கும்பல் கூடியது.

ராகுல் காந்தி மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு; பேரவைக்கு கருப்பு சட்டையில் வந்த உறுப்பினர்கள்

சம்பவ இடத்திற்கு ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி. நாரா சைய்தன்யா, எஸ்.பி.,க்கள் ரவிக்குமார், பக்தவச்சலவம்,  இன்ஸ்பெக்டர்கள் வேலையன், ஆறுமுகம் உள்ளிட்ட காவல் துறையினர் செந்தில்குமரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடி நித்தியானந்தா தனது கூட்டாளிகளை ஏவிவிட்டு இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கொலை சம்பவத்தை நிகழ்த்திய 7 பேரும் தற்போது திருச்சி நீதிமன்றத்தில் சரணைடந்துள்ளனர்.

click me!