புதுவையிலும் ஆன்லைன் ரம்மி சூதாடத்தை ரத்து செய்ய வேண்டும் - நாராயணசாமி!!

By Dinesh TGFirst Published Oct 20, 2022, 4:30 PM IST
Highlights

தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவந்து ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று ஆன்லைன் ரம்மியை ரத்து செய்ய வேண்டும் என்றும், புதுச்சேரியில் கலாச்சாரம் மற்றும் போதை வஸ்துகளால் பெண்களை சீரழிக்கும் பப்புகளுக்கு தடை விதித்து கலாச்சார சீரழிவை தடுத்து நிறுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், ஒரு தலித் சமூதாயத்தை சேர்ந்தவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமை. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும், சிறந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியாகாந்தி, ராகுல்காந்தியின் ஆலோசனையின்படி செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என கூறினார்.

மேலும் பொதுமக்களிடம் குறைகேட்க அதிகாரம் இருப்பதாக தமிழிசை கூறிய நிலையில், சென்னை உயர்தீதிமன்றம் மேல்முறையீட்டு தீர்ப்பை ஆளுநருக்கு தான் அனுப்பியுள்ளதாகவும், அதில் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது அதை அவர் படித்துபார்க்கட்டும் என்றார்.

தெலுங்கானாவில் நான் மக்களை சந்திக்க போகிறேன். மாதத்தின் இரண்டுமுறை அவர்களின் குறைகளை கேட்பேன் என தற்போது தமிழிசையால் கூற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய நாராயணசாமி, அவ்வாறு செய்தால் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவார்கள் என்றும் குறிப்பிட்டார். தான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் கூறாமல், நான் அவரது மக்கள் பணியை தடுத்து நிறுத்துவதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். தெலுங்கானா முழுநேர ஆளுநராக உள்ள அவர் ஏன் அங்கு செல்லாமல் புதுச்சேரியிலே உள்ளார். அவரை அரசு விழாக்களில் அம்மாநில அரசு அழைப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய நாராயணசாமி, ஆளுநரும், துணைநிலை ஆளுநர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் பாஜக ஆளுநர்கள் மூலம் தொல்லைகொடுக்கும் நாடகம் நடத்தி வருகின்றனர். இங்குள்ள ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பரிகொடுத்து வருகின்றனர் என்றும், மக்களுக்கு பணிபுரியும் ஆட்சியாக தெரியவில்லை. மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைசெய்யப்பட்டுள்ளது. அதே போல் புதுச்சேரியில் ஏன் தடை செய்யவில்லை. அரசு உடனடியாக அவசர சட்டத்தை கொண்டுவந்து ஆளுநரிடம் ஒப்புதல் பெற்று ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்

click me!