விஜயகாந்த் பெயரில் அறிக்கை வெளியிட்ட குடும்பத்தினரே.. பேனா நினைவு சின்னம் ஏன் தெரியுமா.? திமுக எம்.பி பதிலடி!

By Asianet TamilFirst Published Jul 24, 2022, 8:53 PM IST
Highlights

கோடிக்கணக்கான தமிழர்களை நலம் பெறச் செய்த அந்த பேனாவிற்கு சில கோடியில் சிலை வைப்பதில் ஒன்றும் தவறே இல்லை என்று திமுக எம்.பி. எம்.எம். அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மெரீனா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நிலைத் தகவலைப் பதிவிட்டுள்ளார். அதில், “மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் விஜயகாந்த் பெயரில் ஓர் அறிக்கை வந்திருக்கிறது. அவர் பெயரில் அந்த அறிக்கை வந்திருந்தாலும், உண்மையில் அது அவருடைய எண்ணமாக இருக்காது என்பதை தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகூட அறியும்! 

இதையும் படிங்க: மெரீனா கடலுக்குள் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வேண்டாம்.. அதற்கு பதில் நூலகம் கட்டுங்க - பூவுலகின் நண்பர்கள்

1996 ஆம் ஆண்டு  அப்போதைய நடிகர் சங்கத் தலைவராக இருந்த கேப்டன் அதே மெரினா கடற்கரையில் தலைவர் கலைஞரின் திரை உலகப் பொன் விழாவிற்காக அவருக்கு விழா எடுத்து ‘தங்க பேனா’வை பரிசாக அளித்தார்! கேப்டனின் பெயரில் இந்த அறிக்கையை வெளியிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இது தலைவர் கருணாநிதிக்கு பல்வேறு வெற்றித்  திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியதாலோ அல்லது பல்வேறு புதினங்கள், சிறு கதைகள், தொடர்கள் எழுதியதாலோ வைக்கப்பட்டும் பேனா சின்னம் அல்ல!  இந்தப் பேனாதான் இட ஒதுக்கீட்டிற்கு கையெழுத்து போட்டு எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், சமூக மற்றும் சிறுபான்மை மக்கள் கல்வி நிலையங்களில் நுழையவும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெறவும் காரணமாக இருந்தது!

இதையும் படிங்க: பேனாவுக்கு ரூ.80 கோடி... பேனாவுக்கு மை நிரப்ப வருடா வருடம் எத்தனை கோடி...! ஸ்டாலினை அலறவிட்ட பாஜக

இந்தப் பேனாதான் மகளிருக்கு சொத்தில் சம பங்கு உண்டு என்று கையெழுத்துப் போட்டு பெண்களுக்கு அப்பன் சொத்தில் பங்கை வாங்கித் தந்தது!  இந்தப் பேனாதான் விவசாயிகளுக்கு இலவச மின்சார அரசாணையில் கையெழுத்துப் போட்டு அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றியது! இந்தப் பேனாவில் போட்ட கையெழுத்துதான் பல்வேறு சமூகநீதித் திட்டங்களை தமிழகத்தில் உருவாக்கி தமிழர்களின் வாழ்வை தமிழ்நாட்டை மேம்படுத்தி சமூகநீதியைக் காத்து வளர்ச்சியை உறுதி செய்தது. எனவே கோடிக்கணக்கான தமிழர்களை நலம் பெறச் செய்த அந்த பேனாவிற்கு சில கோடியில் சிலை வைப்பதில் ஒன்றும் தவறே இல்லை!” என்று அப்துல்லா தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: 80 கோடி செலவில் பேனா நினைவு சின்னம்..யாருக்கு என்ன லாபம்? திமுகவை கண்டித்த விஜயகாந்த்

click me!