அமித்ஷாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதுவது காரியத்திற்க்கு உதவாது.! திமுக அரசை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published May 26, 2023, 11:53 AM IST
Highlights

அமுல் நிறுவனத்திற்கு எதிராக மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுவது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல் உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை அளிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டு இருக்காது என தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு என கூறியுள்ளார். 

ஆவின் நிர்வாக குளறுபடி

பால் உறுபத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், 1981 ஆம் ஆண்டு முதல் 'ஆவின்' என்ற பெயரில் பாலினை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக ஆவின் நிறுவனத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தி.முக அரசின் செயல்பாட்டினைப் பார்க்கும்போது "அழிப்பது சுலபம் ஆக்குவது கடினம்” என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

வீழ்ச்சியை நோக்கி ஆவின்

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே பால் மற்றும் அதன் உப பொருட்கள் விநியோகத்தை குறைப்பது, பால் விலையினை அவ்வப்போது உயர்த்துவது, உப பொருட்களான நெய், வெண்ணெய், பாதாம் பவுடர், இனிப்பு வகைகள், ஐஸ்க்ரீம் வகைகள் ஆகியவற்றின் விலையினை அடிக்கடி உயர்த்துவது, எடைக் குறைப்பு என பல்வேறு குளறுபடிகளை ஆவின் நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது. அண்மைக் காலமாக ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தில் மிகப் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  நுகர்வோர்கள் இதுபோன்ற துன்பங்களை ஒருபுறம் அனுபவித்துக் கொண்டிருக்கையில், பால் உற்பத்தியாளர்கள் தங்களுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

கொள்முதல் நிலையம் தொடங்கும் அமுல்

பசும் பாலின் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 55 ரூபாயாகவும், எருமைப் பாலின் விலையை லிட்டருக்கு 68 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், தி.மு.க அரசு இதை செவி கொடுத்துக் கேட்பதாக தெரியவில்லை. மொத்தத்தில், நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் என இருவரும் தி.மு.க. ஆட்சியில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது வணிகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கயஉதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதோடு, குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவும் பணியையும் மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

நிர்வாக திறமையின்மைக்கு எடுத்துகாட்டு

தமிழ்நாட்டு மக்களின் தேவையையே பூர்த்தி செய்ய முடியாத அவல நிலை நிலவுவநோடு மட்டுமல்லாமல், பிற மாநில நிறுவளங்கள் தமிழ்நாட்டில் கால் பதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் அமுல் நிறுவனத்தின் வணிகத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென்று முதலமைச்சர் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. கடிதம் எழுதுவது காரியத்திற்கு உதவாது. இது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுபோல் உள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை அளிக்கப்பட்டிருந்தால் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டு இருக்காது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு எனதெரிவித்துள்ள  ஓ.பன்னீர் செல்வம் பால் கொள்முதல் விலையை உயர்த்தவும் உடனடி நடவடிக்கை எடுத்து, ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதையிலிருந்து மீட்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்...! அமித்ஷாவிற்கு அவசர கடிதம் எழுதிய ஸ்டாலின்..! என்ன காரணம் தெரியுமா

click me!