காற்றில் பறந்த ஸ்டாலின் வாக்குறுதிகள்...! மேடைக்கு மேடை முழங்கிய மூன்று C க்கள் மட்டும் அமோகமாக உள்ளது- ஓபிஎஸ்

By Ajmal KhanFirst Published Oct 2, 2022, 10:48 AM IST
Highlights

 பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விற்யோகித்த நிறுவனங்களுக்கே மீண்டும் பாமாயில் மற்றும் பகுப்பு விநியோகிக்க அனுமதி வழங்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனத்திற்கே மீண்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள பல வாக்குறுதிகள், தி.மு.க. தலைவர்களால் மேடைக்கு மேடை பேசப்பட்ட 'நீட் தேர்வு ரத்து', 'மாதம் ஒருமுறை மின் கட்டணம்', 'கல்விக் கடன் ரத்து' உள்ளிட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டாலும், தி.முக தலைவரால் மேடைக்கு மேடை முழங்கப்பட்ட மூன்று 'C'-க்கள் Collection, Commission, Corruption ஆகியவை மட்டும் தமிழ்நாட்டில் அபோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதற்கு எடுத்துக்காட்டாக பலவற்றை சுட்டிக்காட்டலாம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 2022 ஆம் ஆண்டு சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு.. 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தரமற்ற பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. இதுகுறித்து, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், நடுநிலையாளர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் கண்டன அறிக்கையை வெளியிட்டு இருந்தேன்.

சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கொடுக்க கூடாது..! மதவாத தீய சக்திகள் தலை தூக்கும்..! அலறும் பாஜக

அனைத்துத் தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வர ஆரம்பித்ததும், இது குறித்து ஓர் ஆய்வுக் கூட்டம் 21-01-2022 அன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான ஆய்விற்குப் பின்னர், தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கருப்புப் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதாக அரசு செய்திக் குறிப்பு எண். 149 நாள் 21-01-2022-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை எந்த நிறுவனமும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தகவல் இல்லை. இந்த வாக்குறுதி கூட நிறைவேற்றப்படாதது மிகுந்த வருத்தமளிக்கும் செயலாகும். இதிலிருந்தே தரமற்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதற்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் காரணம் என்பது தெளிவாகிறது.இந்தச் சூழ்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை விநியோகித்தது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்ட அதே மூன்று நிறுவனங்களுக்கு,

 அதாவது Arunachala Impex, Integrated Service Point and Natural Food Commercials ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு பொது விநியோகத் திட்டத்திற்காக 4 கோடி 'ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட்' விநியோகிப்பதற்கும், ஒரு இலட்சம் டன் பருப்பு வழங்குவதற்குமான ஆணை வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, தரமற்ற பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் செயலில் தி.மு.க.. அரசு ஈடுபட்டிருப்பது என்பது தெள்ளத் தெளிவாகிறது. உண்மையிலேயே இந்த அரசுக்கு மக்கள்மீது அக்கறை இருக்குமானால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியபடி மேற்படி நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்த்திருக்க வேண்டும். ஏன் சேர்க்கவில்லை? என்ன தயக்கம்? மடியில் கனமில்லை என்றால் வழியில் எதற்கு பயம்? மேலும், அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் பிற பொருள்கள் வழங்கும் ஒப்பந்தப் புள்ளியில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார். ஒரு குற்றச்சாட்டிற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஓர் அரசு ஊழியரை, அதைவிட உயர் பதவியில் அமர்த்தலாம் என்பதுபோல் அமைச்சரின் கூற்று உள்ளது. 

சமூக நல்லிணக்க மனித சங்கிலி தமிழகம் முழுவதும் அக்டோபர் - 11ஆம் தேதி நடைபெறும்.. கெத்து காட்டும் திருமாவளவன்.

தரமற்ற பொருட்களை விநியோகித்த நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்காததோடு, அந்த நிறுவனங்களுக்கு புதிதாக ஒப்பந்த ஆணைகளை வழங்கி அவற்றை நியாயப்படுத்திப் பேசுவது என்பது உலகில் எங்கும் கண்டிராத ஒன்று. இதுபோன்ற நடவடிக்கை தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதை ஊக்குவிப்பதற்கு சமம். ஒருவேளை, இதுபோன்ற முறைகேடான, நியாயமற்ற, மக்கள் விரோதமான செயல்களில் ஈடுபடுவதுதான் ‘திராவிட மாடல்’ போலும்! ஊழலை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலுக்கு முன்பு மேடைக்கு மேடை ஊழலைப் பற்றி பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இப்போது அது குறித்து பேசாதது, அவருக்கும் இதில் தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. எனவே, தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும், மேற்படி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையினை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

காந்தி சிலைக்கு மரியாதை செலுத்திய ஆர்.என்.ரவி, மு.க.ஸ்டாலின்...! தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஆளுநர்

 

click me!