"ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!

By Raghupati RFirst Published May 27, 2022, 10:58 AM IST
Highlights

PM Narendra Modi Chennai Visits : சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் 

விழாவில் வணக்கம் என்று தமிழில் கூறி உரையைத் தொடங்கிய அவர், தமிழ் மொழி நிலையானது என்றும், தமிழ்நாடும் தமிழ்நாட்டின் கலாச்சாரமும் உலகளாவியது என்றும், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள் என்றும் பிரதமர் புகழ்ந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் அளிக்கக்கூடிய பங்கிற்கு ஏற்ப, ஒன்றிய அரசும் - திட்டங்களிலும் நிதியிலும் தனது பங்களிப்பை உயர்த்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். 

அதுதான் உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியாக அமையும்! ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களில் மாநில அரசின் பங்களிப்பும் மகத்தானது என்றார். ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களில் தொடக்கத்தில் குறிப்பிடப்படும் ஒன்றிய அரசின் பங்கானது, திட்டம் முடியும்வரை தொடர வேண்டும் என்றும், பயனாளிகளின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களில், அவர்கள் தமது பங்களிப்பை செலுத்த முடியாதபோது ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து அதனை சமமாக ஏற்கவேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமுதாய மக்களின் முக்கியப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் கச்சத்தீவினை மீட்டெடுத்து தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் அவர்களின் உரிமையை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்க இது தகுந்த தருணம் என்பதை மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு நான் நினைவுப்படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்' என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி காணொளி வாயிலாக கலந்துகொண்டார். 

தமிழ்த்தாய் வாழ்த்து - சர்ச்சை  

அப்போது அவர் எழுந்து நிற்கவில்லை என்று கூறப்படுகிறது.  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, எழுந்து நிற்காதது ஏன் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'தமிழ் தாய்  பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார். 

தன் ஆணவ, பொறுப்பற்ற செயலுக்கான காரணத்தை, அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும். 2018-ல் ஐஐடியில் அவர் கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும் இன்று அவர் நடந்துக் கொண்ட விதமும் எதேர்சையாக நடந்ததாக தெரியவில்லை' என்று கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

இதையும் படிங்க : மக்களே உஷார்.! 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை.

click me!