முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை.. ஓபிஎஸ் வலியுறுத்தல்

By Ezhilarasan BabuFirst Published Oct 29, 2021, 4:35 PM IST
Highlights

தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் பாசனத்திற்கு ஆதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக அந்த அணை பாதுகாப்பானது அல்ல என்ற நியாயமற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதோடு இதுகுறித்து கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரளா அரசுடனான நல்லுறவைப் பேணி பாதுகாக்கும் அதே வேளையில் முல்லைப் பெரியாறு பாசன விவசாய பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 

தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் பாசனத்திற்கு ஆதாரமாக விளங்குகின்ற முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை எப்படியாவது குறைக்க வேண்டும் என்பதற்காக அந்த அணை பாதுகாப்பானது அல்ல என்ற நியாயமற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதோடு இதுகுறித்து கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் அறிக்கை ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தென் தமிழ்நாட்டு மக்களின் ஜீவாதார பிரச்சனையாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதன் காரணமாக அணையின்  நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், அணை உறுதிப்படுத்தப்பட்ட பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

இதையும் படியுங்கள்: பசும்பொன் செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி இல்லை..? உளவுத் துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

இதனடிப்படையில் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்திலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை உயர்ந்தது. இந்தச் சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பழமையானது என்றும், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது என்றும் அதிக அளவில் தண்ணீர் தேக்கி வைத்தால் அழுத்தம் தாங்காமல் அணைக்கு சேதம் ஏற்படும் என்றும், அணை பூகம்ப பாதிப்பு பகுதியில் அமைந்துள்ளது என்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 50 லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றும், எனவே இந்த அணை பாதுகாப்பானது என கண்காணிப்புக்குழு கூறியுள்ளதை முழுமையாக நிராகரிப்பதாகவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இது மட்டுமல்லாமல் புதிய அணை கட்டுவதே அடுத்த நியாயமான நடவடிக்கை என்றும் உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் மாதம் இறுதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிக தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கேரள அரசு இது மாதிரியான முறையீடை உச்சநீதிமன்றத்தில் வைத்திருக்கிறதோ என்ற ஐயம் தென் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நிலவுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டினாலும் அணை பாதுகாப்பாகவே இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு ஆய்வுகள் அதையே கூறுகின்றன.

இதையும் படியுங்கள்: தமிழக மக்களே ரொம்ப உஷாரா இருங்க.. குறிப்பா இந்த மாவட்ட மக்கள் அடுத்த 4 நாட்களுக்கு பத்திரமா இருங்க.

இதுகுறித்து வழக்கு விசாரணை வருகிற நவம்பர் மாதம் 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வரும்போது கேரள அரசின் தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் வலுவான வாதங்களை திறமையான வழக்கறிஞர் மூலம் வைக்க வேண்டும் என்பதும், அதே சமயத்தில்  கேரளா உடனான நல்லுறவு பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், தென் தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனி கவனம் செலுத்தி கேரளா அரசுடனான நல்லுறவைப் பேணி பாதுகாக்கும் அதே வேளையில், முல்லைப் பெரியாறு பாசன விவசாய பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!