
பாஜகவில் திருச்சி சிவாவின் மகன்
திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அப்போது சூர்யா கூறும்போது திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்ய விருப்பியதால் பாஜகவில் இணைந்தாக சூர்யா தெரிவித்திருந்தார். இதனையடுத்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் திமுகவிற்கு வர தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இதற்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள் என கூறினார். மேலும் தற்போது காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும் என தெரிவித்தார்.
வைகோவையே தூக்கி எறிந்தோம்
இந்தநிலையில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சூர்யா யார் மீது புகார் தெரிவிக்கிறாரோ, அந்த சசிகலா புஷ்பா தான் இந்த பாரதிய ஜனதா கட்சிக்கு மாநில துணை தலைவராக உள்ளார் எனவே இதற்கு மேல் இதில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். எம்ஜிஆர் திமுகவை விட்டு போன போதே திமுக கவலைப்படவில்லை, வைகோவை தூக்கி எறிந்தோம், திமுக தேம்ஸ் நதி மாதிரி யார் வந்தாலும், யார் போனாலும் அது பற்றி கவலை இல்லை. தேம்ஸ் நதி போன்று 70 வருடம் திமுக போய் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் திமுக போகும் என தெரிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சிக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதியின் இந்த கருத்திற்கு மதிமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்