வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸைக் கூட வைக்க முடியாத ஏழை- எளிய மக்களிடமிருந்து, ரூ. 11 ஆயிரத்து 528 கோடியை அபராதமாக வசூலித்து, மத்திய அரசு வஞ்சித்துள்ளது.
மோடி அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பாதிப்புகள் காரணமாகவே இந்தியாவில் தொழில்கள் நசிந்து, கோடிக்கணக்கானோர் வேலையிழப்புக்கு உள்ளானார்கள். வருவாயை இழந்து வறுமையில் தள்ளப்பட்டார்கள்.
ஆனால், இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்தே- “ஏன் வங்கிக் கணக்கில் பணம் வைக்கவில்லை?” என்று கேட்டு, சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயை அபராதமாக வங்கிகள் சுருட்டியுள்ளன.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்காத நபர்களிடம் அபராதம் வசூலிக்க, வங்கிகள் சட்டத்தில் இடம் உள்ளது.
எனினும் குறைவான அபராதத் தொகையே வசூலிக்கப்பட்டு வந்தது.ஆனால், மோடி அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் வங்கிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப அபராதத் தொகையை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்று வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதைப் பயன்படுத்தி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில வங்கிகள் அபராதத் தொகையை மட்டுமன்றி டெபாசிட் தொகையையும் உயர்த்தின. பெருநகரங்களில் வங்கி வாடிக்கையாளர்க்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை பொதுத்துறை வங்கிகளில் ரூ. 5 ஆயிரம் வரையும், தனியார் வங்கிகளில் ரூ. 10 ஆயிரம் வரையும் உயர்த்தப்பட்டது.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் சிறு, குறு தொழில்கள் நசிந்து, கடுமையான வேலையிழப்பும், வருவாய் இழப்பும் ஏற்பட்டிருக்கும்போது, வங்கிக் கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்தியது கேலிக் கூத்தான நடவடிக்கை என்றே கூறப்பட்டது.
ஆனால், அவற்றையெல்லாம் வங்கிகள் கவனத்தில் கொள்ளவில்லை.மாறாக, நாட்டிலுள்ள 3 தனியார் வங்கிகள் மற்றும் 21 பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க முடியாதவர்களிடம் அபராதம் என்ற பெயரில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 11 ஆயிரத்து 528 கோடியை சுருட்டியுள்ளன.
இது நான்காண்டுக்கான அபராத வசூல் என்றாலும், பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின்னர் இந்த அபராதத் தொகை 2 மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.2014-15ஆம் ஆண்டு ரூ. 2 ஆயிரத்து 84 கோடி, 2015-16ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 138 கோடி, 2016-17ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 318 கோடி என அபராதத் தொகை வசூலிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி-யின் பாதிப்புகள் வெளிப்பட்ட 2017 -18 ஒரே ஆண்டில் இந்த அபராத வசூல் ரூ. 4 ஆயிரத்து 980 கோடியாக அதிகரித்துள்ளது.