OPS vs EPS: பொதுக்குழுவிற்கு தடை கோரிய மேல்முறையீடு வழக்கு.. இபிஎஸ் கனவில் மண் விழுந்தது.. குஷியில் ஓபிஎஸ்.!

By vinoth kumarFirst Published Jun 23, 2022, 6:13 AM IST
Highlights

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் நள்ளிரவே விசாரணை நடைபெற்றது. 

அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுத்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமை கூடாது என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருப்பது போல, இரட்டைத் தலைமை கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே உள்ளதால் அவர் பொதுச்செயலாளர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதையும் படிங்க;- எடுத்த முயற்சி எல்லாம் தோல்வி... ஓபிஎஸ்ஸின் இந்த கோரிக்கையும் நிராகரிப்பு.. பொதுச்செயலாகிறார் இபிஎஸ்?

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது.  இந்த மனுக்கள் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என்றும், திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை அந்த கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியதும் கட்சிதான். எனவே, அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று உத்தரவிட்டார். இதனால், இபிஎஸ் தரப்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ் தரப்பில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது, நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் நள்ளிரவே விசாரணை நடைபெற்றது. சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமியின் இல்லத்தில் வைத்து இந்த விசாரணை நடந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாரயணன், மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலெட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், பொதுக்குழுவை நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பும் விடிய விடிய காரசார வாதம் நடத்தினர். இருதரப்பு வாதங்களும் அதிகாலை 4 மணிக்கு நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக, பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். அதிமுக பொதுக்குழு நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கலாம். ஆனால், 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க;- ஓ.பன்னீர்செல்வத்தின் இறுதி அஸ்திரம் இதுதானா? விழுவாரா? திமிரு எழுவாரா? எடப்பாடியார்..!

click me!