தமிழக அரசை பாராட்டி அதே நேரம் மத்திய அரசிற்கு சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’நிலவின் தென் பகுதியில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறாதது வருத்தமளிக்கிறது. ஆனாலும், இதை நினைத்து கவலைப்படத் தேவையில்லை. நிலவுக்கு மனிதனை அனுப்புவதற்கான பணிகளை விரைந்து முடித்து சாதனை படைக்க இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்.
திண்டிவனம் - கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள செய்தி வரவேற்கத்தக்க நடவடிக்கை. கடந்த 10 ஆண்டுகளாக எனது தலைமையில் பா.ம.க. நடத்திய பல்வேறு போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.
சென்னையில் கடந்த 5 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.1.38, டீசல் விலை ரூ.1.17 விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு விலை உயரும் என்று கூறப்படுவதால் உற்பத்தி வரியை குறைத்து மக்களின் சுமையை போக்க மத்திய அரசு முன்வர வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட ஊதியத்தை பணவீக்க விகிதத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவு ஒப்பீட்டளவில் வரவேற்கத்தக்கது. ஆனால், மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமான 375 ரூபாயை ஊதியமாக வழங்குவது தான் சரியானது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.