பார்மலின் ரசாயனம் பூசப்பட்ட மீன்களை அடையாளம் காண்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்..!!

By Dinesh TGFirst Published Sep 16, 2022, 6:06 PM IST
Highlights

மிருகக்காட்சி சாலையில் கண்ணாடிப் பேழைக்குள் பார்வைக்கு வைக்கப்படும் மிருகங்களின் உடல் அனைத்தும், பார்மலின் கொண்டு தான் பதப்படுத்தப்படுகின்றன. இதுதவிர மனிதனின் உடல் பாகங்கள், தாவரங்கள் ஆகியவற்றையும் பார்மலின் கொண்டு பதப்படுத்தலாம். மருத்துவத்துறைக்கு அடுத்து, குற்றவியல் நடைமுறைக்கு பார்மலின் பயன்பாடு இன்றியமையததாக உள்ளது.

பார்மால்டிஹைடு என்கிற வேதியல் பொருளின் கரைசல் தான் பார்மலின் ஆகும். வெறும் தண்ணீரில் 37% முதல் 40% அளவுக்கு பார்மால்டிஹைடு கலக்கப்பட்டு, பார்மலினாக நமக்கு கிடைக்கிறது. இதற்கு நிறம் எதுவும் கிடையாது. தண்ணீருடன் இதை சேர்த்துப் பார்த்தால் பார்மலின் எது? தண்ணீர் எது? என்கிற வேறுபாடு தெரியாது. பெரும்பாலும் மருத்துவத்துறையில் பார்மலினை கிருமிநாசினியாகவும், மனித உடலை பதப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. மிருகக்காட்சி சாலையில் கண்ணாடிப் பேழைக்குள் பார்வைக்கு வைக்கப்படும் மிருகங்களின் உடல் அனைத்தும், பார்மலின் கொண்டு தான் பதப்படுத்தப்படுகின்றன. இதுதவிர மனிதனின் உடல் பாகங்கள், தாவரங்கள் ஆகியவற்றையும் பார்மலின் கொண்டு பதப்படுத்தலாம். மருத்துவத்துறைக்கு அடுத்து, குற்றவியல் நடைமுறைக்கு பார்மலின் பயன்பாடு இன்றியமையததாக உள்ளது.

மீன்களுக்கும் பார்மலினுக்கும் என்ன தொடர்பு?

எப்போதும் கடலில் இருந்து பிடிக்கப்படும் நீர்வாழ் உயிரினங்களை அன்றைக்கே சாப்பிடுபவது தான் சிறந்தது. ஆனால் கடல் உணவுகள், கடலோர மாவட்டங்களையும் கடந்து பல பகுதிகளுக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் போது ஆழ்கடலில் பிடிக்கப்படும் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஆகியவை வெகு நாட்களாகியும் கெட்டுப் போகாமல் இருக்க பார்மலின் ரசாயனம் கலக்கப்படுகிறது. ஒருமுறை இந்த ரசாயனத்தால் தெளிக்கப்பட்ட அல்லது கலக்கப்பட்ட மீன்கள் உள்ளிட்ட கடல் உணவுகள் 15 நாட்களாகியும் கெடாமல் இருக்கின்றன. 

மீன்களில் பார்மலின் கலந்தால் என்ன நடக்கும்?

பார்மலின் உயிரைக் கொல்லும் ரசாயனமாகும். இதை உணவுப் பொருட்களில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும். மனிதர்கள் பார்மலின் கலந்த ஏதேனும் பொருளை உட்கொண்டால் கண் எரிச்சல், தோல் அரிப்பு, தொண்டைப் புண் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகும். இதனால் வயிற்றுப் புண், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பிரச்னை உள்ளிட்டவை ஏற்படும். ரத்தப் புற்றுநோய் கூட உருவாக வாய்ப்புள்ளது. வணிகத்துக்காக செய்யப்படும் இதுபோன்ற அத்துமீறல் செயல்கள், மனித உயிரையே காவு வாங்கிவிடும். 

பார்மலின் தடவிய மீன்களை எப்படி கண்டறிவது?

மீன் உள்ளிட்ட நண்டுகள், இறால்கள், சுறா உள்ளிட்ட கடல் உணவுகளில் பார்மலின் கலக்கப்பட்டு இருந்தால், அதன்மேல் ஈக்கள் மொய்க்காது. மேலும் இறைச்சிக்கான வாடையில்லாமல் மருந்து போன்ற நாற்றம் வரும். அப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது பார்மலின் போன்ற ரசாயனம் கலக்கப்பட்ட மீன் என்று தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று மீனின் தலைக்கு அருகில் இருக்கும் செதிலை கொஞ்சம் தூக்கினால், மீனவர்கள் பூ என்று சொல்லும் உடல்பகுதி இருக்கும். ஒருவேளை வெளியில் இருந்து பார்மலின் வாடை உங்களுக்கு தெரியவில்லை என்றால், பூ பகுதியில் நிச்சயமாக மருந்து வாடை அடிக்கும். அதை வைத்து நீங்கள் பார்மலின் தடவப்பட்ட மீனை கண்டறியலாம். இது அனைத்து கடல் உணவுகளுக்கும் பொருந்தும்.

உப்பில் சிறந்தது எது?- கல் உப்பா?? இந்துப்பா..??

பார்மலின் தடவப்பட்ட மீனை வாங்கிவிட்டால் என்ன செய்வது?

ஒருவேளை நீங்கள் வாங்கிய மீனில் ஏதேனும் கலப்படம் இருப்பது தெரியவந்தால், அதனுடைய இறைச்சியை ஆய்வகத்துக்கு அனுப்பலாம். அதன்மூலம் கிடைக்கும் முடிவுகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, உணவுப் பாதுகாப்புத்துறையைச் சார்ந்தவர்களிடம் புகார் அளிக்கலாம். அதை தொடர்ந்து அவர்கள் நடவடிக்கையினை மேற்கொள்வார்கள். பார்மலின் கலந்த மீன்களை உரிமையாளர்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால், அவர்களுக்கு லட்ச ரூபாய் அபராதமும், ஒரு சில நடவடிக்கையில் சிறைத் தண்டைக் கூட விதிக்கப்படும். 

மீன் உணவுகளுடன் ஏன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது? காரணம் இதுதான்..!!

நீங்கள் காசு கொடுத்து வாங்கக் கூடிய மீன் உள்ளிட்ட கடல் உணவுகளில் ஏதேனும் சந்தேகமிருந்தால், மீன் வியாபாரிகளிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக, நாம் அனைத்து மீன் வியாபாரிகளையும் குறை சொல்ல முடியாது. இறைச்சிக்கு என்று ஒரு மணம் உள்ளது. அது இருந்தால் தான் உணவுப் பொருளின் ஆரோக்கியத்தை அளவிட முடியும். மணம் இருக்கக்கூடாது, சுத்தமாக இருக்க வேண்டும், ஈ மொய்த்தால் ஆபத்து ஏற்படும், என்பன் போன்று விளம்பரப்படுத்தப்படும் செய்திகளில் வெறும் வணிக நோக்கம் மட்டுமே உள்ளது. அதன்மூலம் மனித உடல்நலனுக்கு கேடு தான் என்பதை அறிந்துகொள்க. 

click me!