அக்னி-5 ஏவுகணை சோதனை, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என இந்தியா விளக்கம் அளித்துள்ள நிலையில், சீனாவை குறிவைத்தே இச்சோதனை நடத்தப்பட்டதாக வெளியான தகவலை பாதுகாப்பு வல்லுநர்கள் மறுத்துள்ளனர்.
5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி ஏவுகணை சோதனை ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த சோதனை சீனாவை குறிவைத்து நடத்தப்பட்டது என பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதனை மறுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் திரு. விகாஷ் ஸ்வரூப், எந்தவொரு நாட்டையும் குறிவைத்து சோதனை நடத்தவில்லை என்றும், சர்வதேவ விதிகளின்படி இச்சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அக்னி-5 ஏவுகணை சோதனை சீனாவை குறிவைத்து நடத்தப்பட்டது என வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய பாதுகாப்புத் துறை வல்லுநர்கள், சீனாவுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அக்னி-5 சோதனை தொடர்பான விவகாரத்தைதன்னிச்சையாக வதந்திகளை பரப்புவதிலும், கருத்துகளை திணிப்பதையும் ஊடகங்கள் ஈடுபடக்கூடாது என சீனா தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சோதனை ஐ.நா. பாதுகாப்பு சபை விதிகளுக்குட்பட்டே நடத்தப்பட்டிருப்பதாக நம்புவதாகவும் சீனா தெரிவித்துள்ளது.