Novel Fruit: நாவல் பழத்தை இந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு மோசமானதா?

By Dinesh TGFirst Published Dec 5, 2022, 9:16 PM IST
Highlights

நாவல் பழம், சில உணவுப் பொருட்களுடன் இணைந்தால் மட்டும் எதிர்மறையான பலன்களை கொடுக்கிறது. அவை எந்தெந்த உணவுப் பொருட்கள் எனப் பார்ப்போம்.

பழங்கள் எப்போதும் நம் உடல் நலனைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படும் பழங்கள், சரும ஆரோக்கியத்திற்கும் உதவிகரமாக இருக்கிறது. அப்படிப்பட்ட பழங்களில் ஒன்று தான் நாவல் பழம். நாவல் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகள் அதிகளவில் இருக்கிறது. மலச்சிக்கலை தீர்க்கும் அற்புதமான பழம் நாவல் பழமாகும். இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துதல், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், உடல் எடையை குறைத்தல், ஈறுகளில் இரத்தக் கசிவை நிறுத்துவது மற்றும் பற்களை சுத்தம் செய்தல் என நாவல் பழத்தின் அளப்பரிய நன்மைகள் மிகவும் அதிகமாக உள்ளது.

நாவல் பழத்தின் நன்மைகள் 

நாவல் பழத்தில் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் சிறந்த பழங்களில் நாவல் பழமும் ஒன்றாகும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் என ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. நம் உடலில் படிந்துள்ள கொழுப்புகளை கரைக்கும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு.

நாவல் பழத்தை சாப்பிட்டவுடன், நாக்கு ஊதா நிறமாக மாறுகிறது. இதனால் இந்தப் பழம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பல நன்மைகளை தன்னகத்தே கொண்ட நாவல் பழம், சில உணவுப் பொருட்களுடன் இணைந்தால் மட்டும் எதிர்மறையான பலன்களை கொடுக்கிறது. அவை எந்தெந்த உணவுப் பொருட்கள் எனப் பார்ப்போம்.

மஞ்சள்

நம் உடலுக்கு மஞ்சள் அதிக நன்மை தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நாவல் பழத்துடன் மஞ்சளை  சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனென்றால், இந்த 2 பொருட்களும் ஒன்றோடொன்று வினைபுரிந்து பதற்றம், வயிற்று வலி மற்றும் ஒவ்வாமை ஆகியவற்றை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

Ginger-Garlic Paste: இஞ்சி-பூண்டு விழுதை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

பால்

நாகல் பழத்தை ஒருபோதும் பால் அல்லது பால் தொடர்பான உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. நாவல் பழத்தை பாலுடன் சேர்த்து உண்டால் வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும் ஆனால், இது பலருக்கும் தெரியாது. அஜீரணம், வாயு மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு, இந்த சேர்க்கை மேலும் பல கெடுதல்களை செய்யும். ஆகவே, நாவல் பழம் சாப்பிடுவதற்கு முன்பாக அல்லது சாப்பிட்ட பிறகு உடனடியாக பால் குடிக்க கூடாது.

ஊறுகாய்

ஊறுகாய் சாப்பிட்டால் உணவின் ருசியானது கூடும். ஆனால், பெரும்பாலான ஊட்டச்சத்து நிபுணர்கள் ஊறுகாய் உடலுக்கு கேடு என பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இதில் உப்பு அதிகமாக இருக்கும். ஏற்கனவே, ஆரோக்கியம் அற்றது என சொல்லப்படும் ஊறுகாயுடன் நாவல் பழம் சேர்ந்தால், உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். நாவல் பழம் சாப்பிடுவதற்கு முன்பாக அல்லது சாப்பிட்ட பிறகு ஊறுகாயை சாப்பிட்டால் வாயு, வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல் ஆகிய உடல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 

click me!