Kidney Problems: வேலை இழப்பால் சிறுநீரகப் பிரச்சனைகள் அதிகரிக்கிறதா? எச்சரிக்கும் நிபுணர்!

By Dinesh TGFirst Published Feb 2, 2023, 7:01 PM IST
Highlights

அனைவருக்குமே மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அதிகப்படியான மன அழுத்தமானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கி விடும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாகி, உடலின் மிக முக்கிய பாகங்களான இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
 

மன அழுத்தம் 

பிரபல மருத்துவமனையில் பணிபுரியும் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணரும், சீனியர் யூராலஜிஸ்ட்டுமான டாக்டர் சூரிராஜு இதுபற்றி கூறுகையில், “30%-க்கும் அதிகமானோர் வேலையிழப்பினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே சிறுநீரகப் பிரச்னைகளுக்கு ஆளாகும் நிலைமை ஏற்படுகிறது. சிறுநீரகப் பிரச்னைகளால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது" என்கிறார்.

சிறுநீரகம் எப்படி பாதிக்கப்படுகிறது?

இரத்தத்தை சுத்திகரிக்கும் உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகம், உடலில் இரத்த ஓட்டம் மற்றும் இரத்த நாளங்களில் உண்டாகும் பாதிப்புகளால் பாதிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக இரத்த சர்க்கரை அளவு போன்றவை சிறுநீரகத்திற்கு சுமையாக மாறி விடுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது, என்கிறார் டாக்டர் சூரிராஜு.

மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம் ஆகியவற்றில் இருந்து விடுபட, சிலர் மதுவை நாடிச் செல்கின்றனர். இது சிறுநீரகத்தை மேலும் பழுதாக்கி விடுகிறது. சிறுநீரகத்தின் முக்கியமான வேலையே இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டுவது தான். ஆல்கஹால் இந்த வேலையை மேலும் கடினமாக்கி விடும், என்கிறார் மருத்துவர் சூரிராஜு.

மன அழுத்தத்தில் இருந்து விடுபட

தினந்தோறும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் அளவையும் தினசரி டயட்டில் குறைப்பது மிகவும் அவசியம். 

உடற்பயிற்சி

ஒருநாளில் குறைந்தபட்சம் 30  முதல் 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலை கட்டுக்கோப்பாக வைப்பது மட்டுமின்றி, இரத்த சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.

எடை பரிசோதனை

நாள்தோறும் உடலில் சேரும் கலோரிகளின் அளவு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இது ஆரோக்கியமான உடல் எடையை அடைய உதவி புரிகிறது. ஏனென்றால் உடல் பருமன் மற்றும் அதீத உடல் எடை போன்றவை தான் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.

குழந்தைகளுக்கு சத்தான கீரை காரப் பொங்கல் இப்படி செய்து கொடுங்கள்!

தூக்கம்

நாள்தோறும் எவ்வித இடையூறும் இன்றி 7  முதல் 8 மணிநேரத் தூக்கம் அவசியமாகும். தூக்கத்தின் இடையே இடையூறு ஏதேனும் ஏற்பட்டால், இதனை சரிசெய்ய தியானம், மருந்து, உடற்பயிற்சி மற்றும் முறையான உணவு போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அலாரம் வைத்துவிட்டு தூங்கும் போது, Snooze செய்யும் பழக்கத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

புகைப்பிடித்தலை தவிர்க்கவும்

புகைப்பிடித்தல் பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. மன அழுத்தத்தில் உள்ள ஒரு நபர் புகைப்பிடிக்கும் போது அது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கிறது. ஆகவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

 

click me!