சத்தான தினை அரிசி தக்காளி சாதம்! செய்யலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Oct 1, 2022, 4:06 PM IST
Highlights

சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன.அதில் ஒன்று தான் “தினை”. தினை தானியத்தை வைத்து இன்று நாம் தினை தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் வழக்கமாக சாப்பிடும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் அல்லாமல் சிறு தானியங்களையும் உணவில் எடுத்துக்கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். சிறுதானியங்களில் பல வகைகள் உள்ளன.அதில் ஒன்று தான் “தினை”. தினை தானியத்தை வைத்து இன்று நாம் தினை தக்காளி சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நமது முன்னோர்கள் தினை தானியத்தில் செய்த உணவுகளை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து உள்ளனர். தினையினால் செய்யப்பட்ட உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதால் உடலில் தசைகள் நன்கு வலுபெறும், இதயத் தசைகளை வலுப்படுத்தும், மனஅழுத்தம் பிரச்சனையை சரி செய்யும்.ஞாபகத்திறனை மேம்படுத்தும்,தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும். மேலும் எலும்பு சம்மந்தமான கோளாறுகளை சரி செய்யும் மகத்துவம் தினைக்கு உண்டு. அதிக மருத்துவ பயன்களை தருகின்ற தினையை வைத்து சுவையான தக்காளி சாதம் செய்யலாம் வாங்க. 

சாதம் மீதமாயிடுச்சா? அப்போ இப்படி செய்ங்க.

தேவையான பொருட்கள்:

1கப் தினை
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது 
3 தக்காளி பொடியாக நறுக்கியது 
3 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 
1ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் 
1 ஸ்பூன் சோம்பு
1 பட்டை
1ஏலக்காய்
2 கிராம்பு
1பிரியாணி இலை
1அன்னாசி மொக்கு
1ஸ்பூன் வரமிளகாய் தூள்
1/2 ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் நெய்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:

முதலில் தினையை நன்றாக கழுவி 10 முதல் 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊற வைத்த தினையை தண்ணீர் வடித்து விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் அன்னாசி மொக்கு சேர்த்து சிவக்க வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு அதனுடன் தக்காளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும். 

பெண்களே உங்களின் ஹார்மோன் ஆரோக்கியம் காக்க இந்த கொட்டை போதும்!

பிறகு வரமிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு கப் தினைக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதித்தவுடன் தினை அரிசியினை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை மிதமான தீயில் வைக்கவும். பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்க்கவும். வெந்த தினை அரிசி மேல் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும்.  அவ்ளோதாங்க ஆரோக்கியமான மற்றும் சத்தான தினை அரிசி தக்காளி சாதம் தயார்! 

குழந்தைகள் முதல் பெரியர்வர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவான தினை தக்காளி சாதம் ரெசிபியை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க .

click me!