உடலுக்கு வலிமை சேர்க்கும் "முருங்கைக்காய் மசாலா"செய்வது எப்படி ? பார்க்கலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Nov 23, 2022, 5:00 PM IST
Highlights

கணக்கில் அடங்கா மருத்துவ நலன்களை தரும் முருங்கைக்காய் மசாலாவை செய்வது எப்படி!பார்க்கலாம் வாங்க!

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வர்கின்றனர். இன்று நாம் நமது வீட்டில் மற்றும் சுற்று வட்டாரங்களில் வளரக்கூடிய முருங்கைக்காய் வைத்து ஒரு அசத்தலான ரெசிபியை காண உள்ளோம். 

முருங்கைக்காயானது சளி மற்றும் தொண்டை புண் போன்றவற்றை எளிதில் குணமடைய செய்ய வைப்பதில் வல்லது.மேலும் கணைய வீக்கம், ஆஸ்துமா மற்றும் கல்லீரல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்தும் தன்மை பெற்றது. அதோடு அல்லாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண்,கண்ணில் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தாக பயன்பட்டு வருகிறது. 

மேலும் இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. இதனை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொண்டால், இரத்த சுத்திகரிப்பு ஆகும் அதே நேரத்தில் சிறுநீரக பிரச்சனைகளில் இருந்தும் எளிதில் விடுபட முடியும். கணக்கில் அடங்கா மருத்துவ நலன்களை தரும் முருங்கைக்காய் மசாலாவை செய்வது எப்படி!பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் - 4
சின்ன வெங்காயம் - 7
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
கடுகு - 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை - 1கொத்து 

குட்டிஸ்க்கு பிடித்த கார்ன் ஃப்ளேக்ஸ் குக்கீஸ் செய்யலாம் வாங்க!

மசாலா அரைப்பதற்கு:

தேங்காய் 2 சில்லு 
சின்ன வெங்காயம் - 5
வர மிளகாய் - 6
சீரகம் - 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

செய்முறை:

முதலில் முருங்கைக்காயின் தோலினை உரித்து ஒரே நீட்ட நீட்டமாக ஒரே அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.வெங்காயம், தக்காளியை மிகப் பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.  ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், தோல் உரித்த சின்ன வெங்காயம், வர மிளகாய்,சீரகம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்த பின் கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு, பின் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர், தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட்டு, பின் முருங்கைக்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட வேண்டும். 

அடுத்து அரைத்த மசாலா மற்றும் உப்பு சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு, பின் தண்ணீர் ஊற்றி, 2 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் இருந்து குக்கரை இறக்கி விட வேண்டும். விசில் அடங்கிய பின்னர், குக்கர் திறந்து கொஞ்சம் கிளறி விட்டு, அதன் மேல் மல்லித்தழையை தூவினால் முருங்கைக்காய் மசாலா ரெடி!!! 
 

click me!