அரைத்த மசாலாவின் சுவையில் சுவையான காராமணி கிரேவி செய்து பார்க்கலாமா!

By Dinesh TGFirst Published Nov 27, 2022, 6:52 PM IST
Highlights

உடலுக்கு தேவையான சக்தியை தரும் இந்த காராமணி வைத்து சூப்பரான ஒரு கிரேவியை தான் இன்று நாம் காண உள்ளோம்

நவ தானிய வகைகளில் ஒன்றான தட்டை பயறு என்று அழைக்கப்படும் காராமணியில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளதால் இது உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு வகைகளில் இதுவும் ஒன்றாகும்.மேலும் இது மலச்சிக்கல் மற்றும் வயிற்று பிரச்சனைகளை எளிதில் குணமாக்கும் தன்மை பெற்றது. 

உடலுக்கு தேவையான சக்தியை தரும் இந்த காராமணி வைத்து சூப்பரான ஒரு கிரேவியை தான் இன்று நாம் காண உள்ளோம்.

இந்த கிரேவியின் சுவைக்கு முக்கிய காரணம் இதில் சேர்க்கப்படும் அரைத்த மசாலாவே ஆகும். இதனை இட்லி, தோசை, சப்பாத்தி,சூடான சதாம் ஆகியவற்றிக்கு வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். 

தேவையான பொருட்கள்:

தட்டை பயறு-2 கப் 
முருங்கக்காய் -1
சின்னவெங்காயம்- 6
பச்சைமிளகாய்- 2
தக்காளி- 2 
கருவேப்பிலை-1 கொத்து
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் சைஸ் 
காய்ந்த மிளகாய்- 6
தனியா - 2ஸ்பூன்
சீரகம் -- 1ஸ்பூன்
தேங்காய் -1/2 முடி (துருவியது)
கடுகு -1/4 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு- 1/4ஸ்பூன்
வெந்தயம் -1/4 ஸ்பூன்
பெருங்காயம்-1/4ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு 
உப்பு-தேவையான அளவு 
எண்ணெய்-தேவையான அளவு 

கடாய் டிஷ் இது ஒரு புது ரகம் "கடாய் மஷ்ரும்"! வாங்க பார்க்கலாம்

செய்முறை:

முதலில் தட்டைப் பயறை இரன்டு முறை அலசி விட்டு, குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும்.  வெங்காயம், தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று முருங்கக்காயை நீட்ட நீட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து , எண்ணெய் காய்ந்த பின்,காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொண்டு, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவை நன்றாக ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு , வெந்தயம், உளுந்தம் பருப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்து பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி விட வேண்டும். 

அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு, வெட்டி வைத்துள்ள முருங்கைக்காய் சேர்த்து,அதில் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வரை வதக்கி விட வேண்டும். பின் வேக வைத்து எடுத்துள்ள தட்ட பயறைச் (தண்ணீருடன்) சேர்க்கவும்.பின் புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள மசாலா பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். 

கிரேவி கொதித்து கெட்டியாக வந்த பிறகு, பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை சேர்த்து இறக்கினால், அரைத்த மசாலாவின் சுவையில் கமகம வாசனையுடன் தட்டைப்பயறு கிரேவி ரெடி!

click me!