முடியையும், முகத்தையும் பளபளவென்று வைத்துக் கொள்ள கிச்சனில் உள்ள வெந்தயம் மட்டும் போதும்!

By Asianet TamilFirst Published Mar 22, 2023, 12:10 PM IST
Highlights

ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி மனது நோகாமல், செலவே செய்யாமல் நம் வீட்டு கிச்சனில் இருக்கும் வெந்தயத்தை மட்டும் உபயோகப் படுத்தி முகத்தையும், கூந்தலையும் எவ்வாறு பளபளவென்று வைத்துக் கொள்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
 

இன்றைய தலைமுறையினரில் ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களை அழகாக வைத்துக் கொள்ள மெனக்கிட்டு நேரத்தை செலவழிக்கின்றனர். அழகு என்று குறிப்பிடும் பொழுது அழகான பளிச்சென்ற முகமும், கருமையான அடர்த்தியான நீண்ட கூந்தலும் முக்கிய இடத்தை பெறுகின்றன.

முகத்தை அழகாக்கி பளிச்சென்று வைத்துக் கொள்ளவும், கூந்தலை ஆரோக்கியமான முறையில் வளர செய்யவும் நாம் பெரும்பாலும் பல்வேறு விதமான ரசாயனம் கலந்த பொருட்களை வெளியில் இருந்து வாங்கி உபயோகப் படுத்தி இருப்போம்.

அந்த ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதால் ஒரு சிலருக்கு சருமத்திலும் சரி, கூந்தலிலும் சரி எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல், பெரிய அளவில் பயன் இல்லாமல் அவதிப்படுவதை பார்த்து இருப்போம்.

இப்படி ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி மனது நோகாமல், செலவே செய்யாமல் நம் வீட்டு கிச்சனில் இருக்கும் வெந்தயத்தை மட்டும் உபயோகப் படுத்தி முகத்தையும், கூந்தலையும் எவ்வாறு பளபளவென்று வைத்துக் கொள்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வெந்தயம் :

வெந்தயத்தில் இருக்கும் இரும்புச்சத்து இளநரையை தடுத்து , முடிஉதிர்வை கட்டுப்படுத்தும். கூந்தலில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வை கொடுக்கிறது.
 

கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !

சருமத்திற்கு வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது:

முகப்பொலிவிற்கு:

வெந்தயத்தை இரவு முழவதும் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பின் அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பால் ஊற்றி அரைத்து பேக் செய்து முகத்தில் தடவி பின் உலர்ந்ததும் முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.

மாசுக்களை நீக்கும்:

வெந்தயம் ஊறிய தண்ணீரை கொண்டு முகம் கழுவி வர சருமத்தில் இருக்கும் மாசுக்களை நீக்கி சருமத்திற்கு தோலிற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது.

பருக்களுக்கு:

வெந்தயத்தில் இருக்கும் வைட்டமின்-சி முகப்பருக்கள் உருவாகுவதை தடுக்கிறது. தவிர முகச்சுருக்கத்தினை ஏற்படுவதை குறைக்கிறது. இதிலுருக்கும் இரும்புச்சத்து முடிஉதிர்வை கட்டுப்படுத்துகிறது.

முடிக்கு வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது:

கூந்தல் வளர்ச்சிக்கு:

வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து அதனை தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
பின் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளித்து வர , முடிஉதிர்வை கட்டுப்படுத்தி, முடியின் வறட்சி தன்மையை அகற்றி மிருதுவான கூந்தலை தருகிறது.

முடி உதிர்வுக்கு:

முடி உதிர்வை தடுக்க, தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி பின் அதனை தினமும் தலைக்குத் தேய்த்து வர முடி உதிர்வைத் தடுத்து கூந்தல் வளர செய்கிறது.

பொடுகுத் தொல்லைக்கு :

தலையில் அரிப்பு மற்றும் பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் வெந்தயத்தை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் தயிர் சேர்த்து அரைத்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊற வைத்து பின் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளித்து வர பொடுகுத் தொல்லை குறைந்து வருவதை காணலாம்.

இளநரை பிரச்சனைக்கு:

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அதனை கறிவேப்பிலையுடன் சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு குளித்து வர இளநரையை இருப்பது குறையத் தொடங்கும்.

மிருதுவான கூந்தலுக்கு:

வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, அதனை தேங்காய் பால் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்க கூந்தலின் வறட்சி நீங்கி மிருதுவாக மாறும்.

click me!