தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இளைஞர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் ராணுவக் கிளர்ச்சியைத் தொடர்ந்து, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தனது உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டுத் தப்பி ஓடிய நிலையில், அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மடகாஸ்கரில் நிலவும் ஊழல், வறுமை, மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அந்நாட்டின் 'Gen Z' இளைஞர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் அரசுக்கு எதிராகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இந்தக் கிளர்ச்சியில் பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, இளைஞர்களின் போராட்டத்துக்கு ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். அதிபர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இதனால், ராணுவம் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா குற்றம்சாட்டினார்.