ராஜா ராணி சீரியலில் நடித்தவர் சாந்தி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் செல்வராஜ் இசைப்பள்ளி ஆசியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ராஜேஷ், பிரகாஷ் என்ற மகன்களும், பிரியா என்கிற மகளும் உள்ளன. இதில் ராஜேஷ் மற்றும் பிரியாவிற்கு திருமணம் ஆகிவிட்டதால் அவர்கள் தனியாக சென்றுவிட்டனர். சாந்தியின் மகள் பிரியா தனது பெற்றோரின் வீடருகே கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடியிருந்துள்ளார். கடைசி மகன் பிரகாஷ் மட்டும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
நடிகை சாந்தியின் கடைசி மகனான பிரகாஷ் டப்பிங் கலைஞராக பணிபுரிந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று காலை அருகில் உள்ள தனது அக்கா பிரியா வீட்டிற்கு சென்ற பிரகாஷ், அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கோபமடைந்த பிரகாஷ், கத்தியை எடுத்து பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பியோடி உள்ளார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அலறியடித்து ஓடி சாந்தியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு சாந்தியின் கணவர் செல்வராஜும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவரை கொலை செய்துவிட்டு தான் பிரகாஷ் பிரியாவை கொலை செய்துள்ளார் என்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில் பிரகாஷ் குறித்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி பிரகாஷ் கஞ்சா மற்றும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. மனநல பிரச்சனையால் அவதிப்படும் மகனுக்கு மருந்து வாங்குவதற்காக அவரது தாய் சாந்தி மருத்துவமனை சென்றபோது தான் இப்படி ஒரு கொடூர செயலை செய்திருக்கிறார் பிரகாஷ். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்கிற கோணத்தில் பிரகாஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.