"பிரபலத்தைப்போல் பாவனை செய்கிறார்" என ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டதால், மார்க் எஸ். சூக்கர்பெர்க் மெட்டா மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இழந்த வணிகம் மற்றும் விளம்பரச் செலவுகளுக்கு இழப்பீடு கோரியுள்ளார்.
"நான் மார்க் சூக்கர்பெர்க், ஆனால் அந்த மார்க் சூக்கர்பெர்க் அல்ல!"
அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தைச் சேர்ந்த மார்க் எஸ். சூக்கர்பெர்க் (Mark S. Zuckerberg) என்ற வழக்கறிஞர் ஒருவர், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் தளத்தால் தான் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக கூறி அந்நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக, ஃபேஸ்புக் தனது கணக்குகளை "போலி கணக்கு" அல்லது "பிரபலத்தைப்போல் பாவனை செய்கிறார்" எனக் கூறி மீண்டும் மீண்டும் முடக்குவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இது அவரது தொழில் மற்றும் வருமானத்திற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
24
தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு!
வழக்கறிஞர் சூக்கர்பெர்க், ஃபேஸ்புக்கின் இந்தத் தொடர் நடவடிக்கைகளால் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். விளம்பரங்களுக்காகச் செலவிட்ட சுமார் 11,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் பல லட்சங்கள்) வீணாகிவிட்டதாகவும், வாடிக்கையாளர்களை இழந்ததாகவும் கூறுகிறார். "இது நெடுஞ்சாலையில் விளம்பரப் பலகையை நிறுத்திவிட்டு, அதன் மீது யாரோ போர்வையால் மூடியது போல" என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பலமுறை அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களைச் சமர்ப்பித்தும் கூட அவரது கணக்குகள் மீண்டும் முடக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
34
மெட்டா மீதான சட்ட நடவடிக்கை மற்றும் அதன் பின்னணி!
வழக்கறிஞர் சூக்கர்பெர்க், இந்தியானாவில் உள்ள மேரியன் சுபீரியர் நீதிமன்றத்தில் மெட்டா மீது வழக்குத் தொடர்ந்தார். இதில், மெட்டா நிறுவனத்தின் அலட்சியம் மற்றும் ஒப்பந்த மீறல்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். தனது இழந்த விளம்பரச் செலவுகளைத் திரும்பப் பெறுவது, கணக்கு முடக்கப்படுவதைத் தடுப்பது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு நிரந்தரத் தீர்வு காண்பது ஆகியவற்றை அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கிற்குப் பிறகுதான், கடந்த மே மாதத்தில் முடக்கப்பட்ட அவரது கணக்கு மீண்டும் மீட்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மெட்டா தரப்பில், "தவறுதலாக அவரது கணக்கு முடக்கப்பட்டுவிட்டது" என ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், வழக்கறிஞர் சூக்கர்பெர்க், இந்தச் சம்பவம் நகைச்சுவையானது அல்ல, குறிப்பாக தனது பணம் சம்பந்தப்பட்ட எனக் கூறுகிறார்.