கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். த.வெ.க. வழக்கில் இவரது வாதங்கள் வைரலாகியுள்ளன.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி த.வெ.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரபல மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் ஆஜராகி வாதாடினார். இவரது வாதங்களை த.வெ.க. தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் நிலையில், இந்தச் சட்ட ஆளுமையின் பின்னணி குறித்துப் பலரும் தேடி வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் வழக்கை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்புக் புலனாய்வுக் குழு (SIT) விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரியும் த.வெ.க. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த முக்கிய வழக்கில் த.வெ.க. தரப்பில் ஆஜராகியுள்ள மூத்த வழக்கறிஞர் தான் கோபால் சுப்ரமணியம்.
24
யார் இந்த கோபால் சுப்ரமணியம்?
இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர்தான் கோபால் சுப்ரமணியம். இவரது பின்னணி என்ன? வாதாடிய முக்கிய வழக்குகள் எவை என்பதைப் பார்க்கலாம்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான இவர், இதற்கு முன்பு, இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாகவும் (2009–2011) கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் (2005-2009) பணியாற்றியுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தால் தானாக முன்வந்து மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்களில் இவர் மிக இளையவர்களில் ஒருவர். இந்த அங்கீகாரத்தை அவர் 1993-ஆம் ஆண்டு பெற்றார்.
34
கோபால் சுப்ரமணியத்தின் முக்கிய வழக்குகள்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது நடந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரித்த நீதிபதி ஜெ.எஸ். வர்மா தலைமையிலான ஆணையத்தில் இவர் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் குற்றந்தொடுக்கும் வழக்கறிஞராகவும், 2001-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
2008 மும்பை தாக்குதல்களில் உயிர்பிழைத்த ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் தண்டனையை உச்ச நீதிமன்றத்தில் இவர் வெற்றிகரமாக நிலைநிறுத்தினார்.
இவர் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராகவும் (2010-2011) பணியாற்றியுள்ளார். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சாமர்வில் கல்லூரியின் உறுப்பினராகவும் உள்ளார்.
சட்டத் துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2009-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவரால் சிறந்த சட்ட வல்லுநருக்கான தேசிய சட்ட தின விருதைப் பெற்றார்.
இவ்வாறு, இந்திய சட்டத் துறையில் ஆழ்ந்த அனுபவமும், பரந்த சட்ட அறிவும் கொண்ட கோபால் சுப்ரமணியம், கரூரில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜரானார். ஆதவ் அர்ஜுனாதான் இவரை வழக்கறிஞராகக் களமிறக்கினார் எனக் கூறப்படுகிறது. இவரது வாதங்களே தற்போது த.வெ.க.வினரால் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.