மேட்டூர் அணையில் கிடுகிடுவென உயரும் நீர்.? கர்நாடக அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் எவ்வளவு தெரியுமா?

First Published Jul 14, 2024, 10:59 AM IST

மேட்டூர் அணையில் நீர் மட்டம் வெகுவாக சரிந்த நிலையில், விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடக நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 20ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 
 

mettur dam full

தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகா

மேட்டூர் அணையின் நீர் தான் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உற்பத்தியாகும் காவிரி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என உரிமை கொண்டாடிவருகிறது கர்நாடக அரசு. மழை பெய்து அணை முழுவதும் நிரம்பினால் மட்டுமே தமிழகத்தில் தண்ணீர் திறந்தவிடப்படுகிறது.

அதுவும் உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது. இதற்காகத்தான் தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி தண்ணீரை சுமூகமாக பங்கிட்டுக் கொள்ளவே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் எந்த உத்தரவுகளையும் கர்நாடக அரசு மதிக்கவே இல்லை. 

mettur 1

வறட்சியால் விவசாயம் பாதிப்பு

இதனால் கர்நாடக அணைகளில் இருந்து ஆண்டு தோறும் திறந்து விட வேண்டிய நீரையும் திறக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. எப்போதும் காவிரி டெல்டா பகுதி குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு 50 அடிக்கு குறைவாக இருந்ததால் நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு சார்பாக குறுவை தொகுப்புதிட்டத்தை அறிவித்தது. 

Latest Videos


Mettur dam full 12 dist warning

உயரும் கபினி அணை

இந்த சூழ்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.  கர்நாடகவின் முக்கிய அணையான கபனியில் நீர்மட்டம் தற்போது 83.30 அடியை எட்டியுள்ளது.

எந்த நேரமும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் கபனி அணை உள்ளது. மேலும் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி அணைக்கு நீர்வரத்து 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து அணையின் பாதுகாப்பை கருதி கபினி அணையில் இருந்து காவிரியில் 20,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 

Kabini Dam

20ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து 19,181 கன அடியாக உள்ள நிலையில் 20,000 கனஅடி நீர்த்திறக்கப்படுகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இரண்டாவது நாளாக 5000 நாடியாக வந்து கொண்டிருக்கிறது தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் மேலும் நீர்வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை - நீர் வரத்து உயரும்

அதே நேரத்தில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,191 கன அடியிலிருந்து 4,013 கன அடியாக அதிகரித்துள்ளது. நீட்மட்டமானது 42.76 அடியாக உள்ளது.  குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீரானது இன்று மாலை ஒக்கேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர் மட்டும் கிடு கிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!