விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதவ் அர்ஜுனா, திமுகவினரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, தி.நகர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். திமுக கொடிகட்டிய வாகனங்கள் தனது அலுவலகத்தைச் சுற்றி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவருமான ஆதவ் அர்ஜூனா. கடந்த ஆண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். இவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வகையில் திமுக கூட்டணியில் பொதுத்தொகுதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் திமுக தலைமையோ பொது தொகுதி ஒதுக்கீடு செய்ய மறுத்துவிட்டது. இதன் காரணமாக அதிருப்தியில் இருந்து வந்த ஆதவ் அர்ஜூன் கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை விமர்சித்து வந்தார்.
24
தவெகவில் ஆதவ் அர்ஜுனா
ஒரு கட்டத்தில் ஆட்சியில் பங்கு மற்றும் திமுகவை தொடர்ந்து சீண்டி வந்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா அதிரடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து சில மாத காலத்தில் நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்த அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் திமுகவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆதவ் அர்ஜுனா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
34
தி.நகர் துணை ஆணையரிம் புகார்
இதுதொடர்பாக ஆதவ் அர்ஜுனா சார்பில் அவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி தியாகராய நகர் துணை ஆணையரிம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் கடந்த மாதம் 10-ம் தேதி வியாழன் கிழமை அமர்ந்திருந்தேன். அப்போது எனது அலுவலகத்தைச் சுற்றி திமுக கொடி கட்டிய ஆட்டோ மற்றும் கார்களில் ஆயுதங்களுடன் சிலர் இரண்டு முறை சுற்றி, சுற்றி வந்தனர். அவர்களால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
44
முதல்வர் ஸ்டாலின்
எனவே எனக்கும், எனது அலுவலகம் மற்றும் இல்லத்துக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மனுவுடன் திமுக கொடி கட்டிய வாகனங்கள் தனது அலுவலகத்தை தொடர்ந்து வட்டமடித்து நோட்டமிட்ட சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளையும் போலீசாரிடம் ஆதவ் அர்ஜுனா சமர்ப்பித்துள்ளார். மேடைக்கு மேடை திமுகவையும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.