அந்தரங்க வீடியோ வழக்கு: காவல்துறையின் கேவலமான செயலுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

Published : Jul 15, 2025, 07:03 PM ISTUpdated : Jul 15, 2025, 07:15 PM IST

இணையதளங்களில் பரவிய அந்தரங்க வீடியோக்களை நீக்கக் கோரிய இளம் பெண் வழக்கறிஞரின் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையில் வீடியோவை காவல்துறையினர் பார்த்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

PREV
13
சென்னை உயர் நீதிமன்றம்

இணையதளங்களில் பரவிய தனது அந்தரங்க வீடியோக்களை நீக்கக் கோரி இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் முன்னிலையிலேயே சம்பந்தப்பட்ட வீடியோவை காவல்துறையினர் பார்த்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில், "கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலித்தேன். அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் பரவியுள்ளன. இந்த வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்கும்படி மத்திய அரசுக்கு கடந்த மாதம் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த வீடியோவை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கண்கலங்கினார். பின்னர், இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை 48 மணி நேரத்துக்குள் இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக கடந்த ஜூலை 9-ஆம் தேதி உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற விவகாரங்களில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தமிழக காவல்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக டி.ஜி.பி. உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

23
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் 70 இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ, புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் மத்திய அரசு முடக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஜூலை 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதன்படி, பெண் வழக்கறிஞர் வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி வீடியோ இடம்பெற்றிருந்த அனைத்து இணையதளங்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 39 இணையதளங்களில் இந்த வீடியோக்கள் மீண்டும் பரவி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, வீடியோக்கள் மீண்டும் பரவாமல் தடுப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, இணையதளங்களில் பகிரப்பட்ட அந்தரங்க வீடியோக்களை அகற்ற எங்கு புகார் அளிக்க வேண்டும், புகார் அளித்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விரிவான மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

33
காவல்துறைக்கு நீதிபதிகள் கண்டனம்

மேலும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டுவதற்காக சம்பந்தப்பட்ட வீடியோவை அப்பெண் முன்னிலையில் 7 காவல்துறையினர் பார்வையிட்டு விசாரித்ததற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

காவல்துறையின் இந்த செயல் ஏற்கனவே பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்றும், இது போன்ற வழக்குகளில் விசாரணைக்கு பெண் காவல்துறை அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர், நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நீதிபதி, முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வருகிற ஜூலை 22-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories