TN Budget 2026 : தமிழக அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான முதல் முழுமையான பட்ஜெட்டில், சென்னை மாநகரின் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பூந்தமல்லி பைபாஸ் - போரூர் - வடபழனி மெட்ரோ ரெயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை மேற்கு பகுதிகளில் பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.
பல ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கூவம் மற்றும் அடையாறு ஆறுகளில் பொதுமக்கள் படகு சவாரி செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் பாதுகாப்பாக நீரில் விளையாடும் வகையில் ஆனந்தக் குளியல் (Recreational Water Activity) வசதிகளையும் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
சென்னையின் நீர்வழிப் பகுதிகளை சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு மையங்களாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு மத்திய அரசிடம் பரிந்துரை.
பூந்தமல்லி - போரூர் - வடபழனி மெட்ரோ சேவை விரைவில் தொடக்கம்.
1,000 புதிய AC மின்சார பேருந்துகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
கூவம் மற்றும் அடையாற்றில் படகு சவாரி வசதி.
சென்னை முழுவதும் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைப்பு.
சென்னையின் போக்குவரத்து, மின்சார வசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக மெட்ரோ விரிவாக்கம், மின்சார பேருந்துகள் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் போன்ற திட்டங்கள் நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.