டாஸ்மாக் தலைமை அலுவலகம் சோதனை
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்த சோதனையில் டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் ரூ.1000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களையோ துன்புறுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கில் ட்விஸ்ட்! புதிய நீதிபதிகள் கேட்ட கேள்வி! அதிர்ச்சியில் தமிழக அரசு!
அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறையின் மேல்நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தனர். இந்நிலையில் மார்ச் 25ம் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எந்தவித காரணமும் தெரிவிக்காமல் இந்த வழக்கில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு நீதிபதிகளும் விலகுவதாக அறிவித்தனர்.
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், கே.ராஜசேகர் அமர்வுக்கு தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டதை அடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 1ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறையின் பதில் மனுவுக்கு, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதி ஒத்திவைத்தனர்.
வேறு அமர்வுக்கு மாற்ற கோரிக்கை
இந்நிலையில் டாஸ்மாக் வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்பதால் வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வில் இது தொடர்பாக முறையிடும் படி அறிவுறுத்தியது. மேலும், அந்த அமர்வு எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப நிர்வாக ரீதியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.