திற்பரப்பு அருவியில் குளியல் போட்டு விட்டு, சுடச்சுட பிரியாணி அல்லது புரோட்டவை ஒரு பிடி பிடித்து விட்டு, நீங்கள் அருகில் சுற்றிப்பார்க்க ஏராளாமான இடங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.
மாத்தூர் தொட்டிப் பாலம்: ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமான இது திற்பரப்பு அருவியில் இருந்து வெறும் 11 கிமீ தூரத்திலேயே அமைந்துள்ளது. பறளி ஆற்றின் குறுக்கே சுமார் 115 அடி உயரத்தில் 28 தூண்களுடன் பிரம்மாண்டமாக இருக்கும் மாத்தூர் தொட்டிப் பாலம் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். தொட்டிப் பாலத்தின் மேலே மக்கள் நடந்து சென்றால் கன்னியாகுமரியின் அடர்ந்த தென்னை மரக் காடுகளும், மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகும் உங்களை சுண்டியிழுக்கும்.
பேச்சிப்பாறை அணை: திற்பரப்பு அருவியில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணை அடந்த வனப்பகுதியில் அமைதியான சூழலை நாடுபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அணையின் அழகும், வானுயர உயர்ந்து நிற்கும் மரங்களின் அழகும் உங்களை கொள்ளை கொள்ளும்.
பத்மநாபபுரம் அரண்மனை: திற்பரப்பு அருவியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கலைநயம் மிக்க மர வேலைப்பாடுகள் கொண்ட இந்த பிரம்மாண்ட அரண்மனை உங்களை வியக்க வைக்கும்.