கோடையிலும் வற்றாத தமிழகத்தின் ஒரே அருவி.. திற்பரப்பு எப்படி செல்வது? அருகில் என்னென்ன பார்க்கலாம்?

Published : Apr 28, 2026, 02:17 PM IST

Thirparappu Falls Tourism Guide 2026: தமிழகத்தின் மற்ற அருவிகள் வறண்ட நிலையில் கோடையிலும் ஆர்ப்பரிக்கும் திற்பரப்பு அருவிக்கு எப்படி செல்வது? அருகில் என்னென்ன இடங்கள் பார்க்கலாம்? என்பது குறித்து பார்ப்போம்.

PREV
14
தண்ணீருக்காக ஏங்கும் அருவிகள்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தலைநகர் சென்னை முதல் தென்கொடி முனையான கன்னியாகுமரி வரை பகலில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்பம் வாட்டுகிறது. வெயிலில் இருந்து விடுதலை பெற மக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களை தேடி ஓடி வருகின்றனர். மேலும் அருவிகளில் குளித்து வெப்பத்தை தணிக்கலாம் என்று பார்த்தால் புகழ்பெற்ற குற்றால அருவி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இது மட்டுமின்றி சுருளி அருவி, கும்பக்கரை என பிரசித்தி பெற்ற அருவிகள் அனைத்தும் தண்ணீருக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றன.

கோடையிலும் வற்றாத ஒரே அருவி திற்பரப்பு

ஆனால் என்னதான் வெயில் வாட்டினாலும் தமிழகத்தில் ஆண்டு முழுவதும் நீர் விழுந்து கொண்டே இருக்கும் ஒரு அருவி உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அதுதான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவி. இன்றைய (ஏப்ரல் 28) நிலவரப்படி திற்பரப்பு அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வரும் மக்கள் திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர்.

24
திற்பரப்பில் மட்டும் தண்ணீர் விழுவது ஏன்?

தமிழகத்தின் பிரதான அருவிகள் நீரின்றி வறண்டு போய் கிடக்க, திற்பரப்பு அருவியில் மட்டும் எப்படி தண்னீர் விழுகிறது? என நீங்கள் கேட்கலாம். மற்ற அருவிகள் மழையை மட்டும் நம்பி இருக்கும் நிலையில், திற்பரப்பு அருவி கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேலே ஒரு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆற்றின் வழியாக வந்து தடுப்பணையில் சேர்வதால் கோடையிலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும்.

34
திற்பரப்பு எப்படி செல்வது?

சுட்டெரிக்கும் கோடையில் சுமார் 50 அடி உயரத்தில் இருந்து விழும் அருவி தண்ணீரில் குளியல் போடுவது பேரானந்தமாக இருக்கும். கோடையிலும் மக்களை ஏமாற்றாத திற்பரப்பு அருவிக்கு எப்படி செல்வது? என்பது குறித்து பார்ப்போம். திற்பரப்பு அருவி நாகர்கோவிலில் இருந்து சுமார் 42 கி.மீ தொலைவிலும், தக்கலையில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும் உள்ளது. சென்னை, திருச்சி, கோவை என தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நாகர்கோவிலுக்கு பேருந்துகள், ரயில்கள் உள்ளன.

அரசு பேருந்துகள் உண்டா?

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இருந்து திற்பரப்பு அருவிக்கு குறிப்பிட்ட இடைவேளையில் அரசு பேருந்துகள் உள்ளன. இல்லாவிடில் நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம், திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் தக்கலை சென்று அங்கு இருந்து டவுண் பஸ்களில் ஏறி திற்பரப்பு செல்லலாம். காரில் அல்லது பைக்கில் வருகிறீர்கள் என்றால் நாகர்கோவில் வராமலேயே ஆரல்வாய்மொழியில் இருந்து நேரடியாக திற்பரப்பு சென்று விட முடியும்.

44
திற்பரப்பு அருகில் உள்ள சுற்றுலா இடங்கள்

திற்பரப்பு அருவியில் குளியல் போட்டு விட்டு, சுடச்சுட பிரியாணி அல்லது புரோட்டவை ஒரு பிடி பிடித்து விட்டு, நீங்கள் அருகில் சுற்றிப்பார்க்க ஏராளாமான இடங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்ப்போம்.

மாத்தூர் தொட்டிப் பாலம்: ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப் பாலமான இது திற்பரப்பு அருவியில் இருந்து வெறும் 11 கிமீ தூரத்திலேயே அமைந்துள்ளது. பறளி ஆற்றின் குறுக்கே சுமார் 115 அடி உயரத்தில் 28 தூண்களுடன் பிரம்மாண்டமாக இருக்கும் மாத்தூர் தொட்டிப் பாலம் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். தொட்டிப் பாலத்தின் மேலே மக்கள் நடந்து சென்றால் கன்னியாகுமரியின் அடர்ந்த தென்னை மரக் காடுகளும், மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகும் உங்களை சுண்டியிழுக்கும்.

பேச்சிப்பாறை அணை: திற்பரப்பு அருவியில் இருந்து சுமார் 14 கிமீ தொலைவில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணை அடந்த வனப்பகுதியில் அமைதியான சூழலை நாடுபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். அணையின் அழகும், வானுயர உயர்ந்து நிற்கும் மரங்களின் அழகும் உங்களை கொள்ளை கொள்ளும்.

பத்மநாபபுரம் அரண்மனை: திற்பரப்பு அருவியில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் பத்மநாபபுரம் அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கலைநயம் மிக்க மர வேலைப்பாடுகள் கொண்ட இந்த பிரம்மாண்ட அரண்மனை உங்களை வியக்க வைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories