Free Bus Travel: மலைப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாதம்தோறும் இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை, பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், பணிபுரியும் பெண்களுக்கு தோழிகள் விடுதி என சிறப்பான திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என்பது தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டமாகும்.
24
பெண்கள், மாணவிகள் வரவேற்பு
இந்த திட்டத்தின்மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் ஆகியோர் டவுன் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து வருகின்றனர். இதன்மூலம் பஸ் டிக்கெட்டுக்கு தேவையான பணம் மிச்சமாவதால் அதனை வேறு செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிகிறது. தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த திட்டத்துக்கு பெண்கள், கல்லூரி மாணவிகள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
34
மாற்றுத்திறனாளிகளுக்கும் இப்போது இலவசம்
இந்நிலையில், மலைப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளும், அவருக்கு துணையாக வருபவர்களும் சாதாரண கட்டண பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று சுதந்திர தின உரையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இதற்கான அரசாணையை தமிழக அரசு இப்போது வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் துணைக்கு வரும் ஒரு துணையாளர் ஆகியோர் சாதாரண கட்டண பேருந்தில் இனி எந்தவித கட்டணமும் செலுத்தாமல் பயணிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.