Wakf Act amendment : இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரில் வழங்கப்படுகிற சொத்துகளை நிர்வகிக்க கூடியது வக்ஃபு வாரியம். இந்த அமைப்பில் கடந்த 1995ஆம் ஆண்டு சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தற்போது பாஜக அரசு மீண்டும் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வந்தது.
ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கூட்டுக் குழுவின் முடிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி எதிர்க்கட்சிகளின் 500க்கும் மேற்பட்ட திருத்தங்கள் கொடுத்திருந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் 14 திருத்தங்கள் மட்டும் கூட்டுக் குழுவில் ஏற்கப்பட்டன.
வக்ப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு
இந்த திருத்த மசோதாவில் வக்ஃபு கவுன்சில் என்ற அமைப்பில் பொதுவாக அனைவரும் முஸ்லிம்களாகவே இருப்பர். ஆனால் மத்திய அரசின் புதிய மசோதாவில் முஸ்லிம் அல்லாத பிற மதத்தவர் 2 பேரும் உறுப்பினராக இடம்பெறுவர். வக்ஃபு வாரியத்தின் சொத்து தொடர்பான சர்ச்சையில் மாவட்ட ஆட்சியர் இறுதி முடிவு எடுக்கக் கூடிய அதிகாரத்தை மத்திய அரசின் புதிய மசோதா வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வக்ஃபு சொத்துகள்- அரசின் சொத்துகள் என ஆட்சியர் அறிக்கை தந்தால், சட்டப்படி அரசு சொத்தாக மாற்றப்படும்.
வக்ப் சட்ட திருத்தம் - திருத்தம் என்ன.?
இது மட்டுமில்லாமல் ஒரு சொத்து வக்ஃபு வாரியத்துக்கு சொந்தமா என்கிற கணக்கெடுக்கிற உரிமையை இனி வக்ஃபு வாரியத்தில் இல்லை எனவும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மசோதாவிற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வருகிறார்.
சட்டப்பேரவையில் தனிதீர்மானம்
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக எம்பிகள் நாடாளுமன்ற நிலை குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு வக்பு சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் பேரவையில் முன்மொழிய உள்ளது. இதனிடையே பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று கொண்டவரப்படவுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.