செங்கோட்டையனின் அடுத்த மூவ்! ஓபிஎஸ் வீடு தேடி சென்று ரகசிய மீட்டிங்!

Published : Sep 25, 2025, 08:56 PM IST

அதிமுகவில் இருந்து பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வத்தை ரகசியமாகச் சந்தித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அரசியல் நகர்வுகள் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
13
செங்கோட்டையன் அடுத்த மூவ்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததால் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதால், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்.ஸின் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன், ஈ.பி.எஸ்ஸிடம் வலியுறுத்தியதோடு, அதற்குக் காலக்கெடுவும் விதித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது கட்சிப் பொறுப்புகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டன.

23
ஓ.பி.எஸ் - செங்கோட்டையன் ரகசியச் சந்திப்பு

செங்கோட்டையன் தினகரனைச் சந்தித்ததாகக் கூறப்பட்டதை மறுத்த நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவர் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு நண்பரின் வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்ததாகவும், சுமார் இரண்டு மணி நேரம் ஓ.பி.எஸ்ஸும், செங்கோட்டையனும் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இரு தலைவர்களும் அதிமுகவின் ஒருங்கிணைப்பு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தச் சந்திப்புக் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அதிமுகவில் பொறுப்புகள் பறிக்கப்பட்ட பிறகு செங்கோட்டையன் எடுத்துள்ள இந்த நகர்வு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

33
டிடிவி தினகரனைச் சந்தித்தாரா?

பதவி பறிக்கப்பட்டதையடுத்து, செங்கோட்டையன் தனது சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களும் அமமுகவினர் சிலரும் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், நேற்று (செப். 24) அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை செங்கோட்டையன் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாகவும், இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலைச் செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.

இன்று கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. அதிமுகவின் ஒருங்கிணைப்புக் குறித்து யாரிடமும் நான் பேசவில்லை. அதுபோன்ற செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இதுகுறித்து விளக்கமளித்தேன். நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories